Saturday, August 25, 2012

23. இளையராஜாவின் இயற்பியல் பகுதி 13


ஒரு பாடல் எப்பொழுது, எப்படி நம் மனதுக்குள் இறங்குகிறது? இந்த உலகை நிர்வகிக்கும் காலத்தின் ரகசியங்களில் இதுவும் ஒன்றோ? ஏதோ ஒரு நிகழ்வில் ஒரு பாடல் முழுதுமோ அல்லது அதன் ஒரு துளியோ நம் காதில் விழுகிறது. அதை நாம் கேட்ட நொடியில், பிறகு பலமுறை கேட்கும் நொடிகள் உரசி உரசி காலத்தின் இழை பாடலுக்குள் நுழைந்து மேலும் மேலும் நினைவுகளை கோர்த்துக் கொண்டே போகிறது இல்லையா? இதில் மனதுக்குள் இறங்கிய நொடி என்று எதை அடையாளப்படுத்துவது?

இப்படித்தான், நான் B.Sc படித்துக் கொண்டிருந்த பொழுது, பசுமலை பள்ளியில் பார்வையற்றோர் எழுதும் தேர்வுக்கு எங்கள் கல்லூரி மூலம் சென்றிருந்தேன். அவர்கள் விடை சொல்லச் சொல்ல‌ நாம் எழுத வேண்டும். செந்தில் குமார் என்பவருக்கு தேர்வு எழுத நான் அவர் அருகில் அமர்ந்தேன். அவர், பிறந்த பொழுதிலிருந்து மனதின் மூலமே உலகைப்பார்த்து வளர்ந்தவர். பசுமலையில், சாலையில் இருந்து நீண்டு அடிவாரத்தில் முடியும் அழகிய பாதையின் முடிவில் இருந்தது தேர்வு அறை.

செந்தில் குமார் என்னிடம் பேசிய முதல் வரி, "நான் சொல்வதை மட்டும்தான் எழுதவேண்டும்.எனக்கு உதவுகிறேன் என்று நீங்களாக எதுவும் எழுதுவது எனக்கு பிடிக்காது". எனக்கு அவரை உடனே பிடிக்கத் துவங்கியது. இவரின் ஒன்பது தேர்வுகளை இரண்டாண்டுகள் நான் எழுதினேன். தேர்வு முடிந்து, அந்த வேப்பமரம் நிறைந்த, வேப்பம்பழங்கள் இறைந்த பள்ளியின் சாலை வழியே நாங்கள் பசுமலை பேருந்து நிறுத்தம் வரை நடந்து வருவோம். சரியான இடங்களில்,  தேவைக்கு ஏற்றவாறு வளைந்து, மேடுபள்ளங்களில் சரியாக கால் வைக்கும் அவரின் புலன்களின் நுண்ணறிவு என்னை வியக்க வைக்கும். இவர், பெரும்பாலும் ஏதேனும் ஒரு பாடலை "hum" செய்வார். அதில் பெரும்பான்மை இளையராஜாவுடையதாக இருக்கும்.

அப்படிப்பட்ட தேர்வு முடிந்த வெயில் நிறைந்த மதிய வேளை ஒன்றில் தான் அவர் "ஊரெல்லாம் உன் பாட்டுதான்" (ஊரெல்லாம் உன் பாட்டு / 1991 / 3 versions Yesudoss, Swarnalatha, Ilayaraja) - முணுமுணுத்தபடி மூன்றாக மடித்திருந்த தன் ஊன்றுகோலை பிரித்து நீட்டிக் கொண்டிருந்தார். இந்தப் பாடல் மூன்று பேரால், மூன்று வெவ்வேறு இசைத் தளங்களில், மூன்று முறை பாடப்படும். இந்த மூன்று  மூன்று வெவ்வேறான உணர்வின் ரேகைகளை மனதில் வரையக்கூடியவை. எனக்கு இரண்டாம் stanzaவில் வரும் வயலின் மீது ஒரு அதீத பிடிப்பு. இளையராஜா பாடும் version ஒரு stanza மட்டுமே கொண்டது என்றாலும் அதிலும் இந்த வயலின் கோர்வை வரும்.

இசைக் கல்லூரியில் பயிலும் அவரிடம் இந்தப் பாட்டின் இரண்டாம் stanza வயலின் எவ்வளவு அற்புதமாக இருக்கிறது அதை உங்கள் புல்லாங்குழலில் வாசியுங்களேன் என்றேன். லேசாக சிரித்தபடி தன் ஜோல்னா பையை தடவிக்கொண்டார். அதனுள் உறங்கிக்கொண்டிருக்கும் குழலை எழுப்பினாரோ என்னவோ...

சற்று தூரம் நடந்த பின், அடிவேர்கள் பரந்திருந்த ஆல மரத்தின் அடியிலிருந்த சிமிண்ட் திட்டில் அமர்ந்து புல்லாங்குழலை வெளியில் எடுத்தார். காலத்தின் துளைகளில் நினைவை இட்டு நிரப்பக் காத்திருந்தது போல பேசாமல் இருந்தது அந்த புல்லாங்குழல். பெருகி வரும் காட்டருவியின் நீர் பிரிந்து, சிற்றோடை போல இரு கரைகளிலும் இருக்கும் சிறு சிறு பாறைகளின் நடுவே காலகாலமாக வழிந்தோடி வழிந்தோடி, பச்சை பூத்து ஒரு வாசம் வீசுமே..அந்த சூழலையும் அந்த வாசனையும் நுகரும் பொழுது ஒரு உணர்வு தோன்றுமே...அதைப்போன்றதொரு உணர்வை பீறிட்டு கிளப்பியது அவர் வாசித்த "ஊரெல்லாம் உன் பாட்டு".

அந்த இரண்டாம் stanza  துவக்கத்தில் வரும் வயலின் நடுவே, வயலினை வைத்தே ஒரு ஒற்றை stroke போட்டிருப்பார் இளையராஜா...அதை அப்படியே புல்லாங்குழலில், ஒரு காலத்துகளுக்குள் நினைவின் ஒரு சொட்டை தொட்டு எடுப்பது போல், குழலின் துளையில் விரலை வைத்தெடுத்து வாசித்தார் செந்தில் குமார். பாடலின் ஒரு மிக அற்புதமான நொடிக்குள் நம்மைத் தூக்கியெறியும் அந்த வயலின் நொடிகள்...ஒருவேளை அந்த இரண்டாம் stanzaவில் முழுவதுமே புல்லாங்குழலை வைத்திருக்கலாமோ இளையராஜா என்றேன் நான். இது நடந்தது 1993ல்.

இந்தப் பாடலில் வரும் கப்பாஸில் ஒரு மாயம் இருக்கிறது. நதியோ, அருவியோ ‍ ஏதோ ஒரு நீரோட்டத்தில் கால்களை ஆட்டியபடி இந்தப் பாடலை கேட்டுப் பாருங்கள். எத்தனை வேறுபட்ட வேகத்தில் கால்கள் ஆடத்துவங்கினாலும், பாடல் செல்ல செல்ல, தானாகவே அந்த கப்பாஸ் ஒலிக்கும் இடைவெளியின் லயத்திற்கேற்றவாறே நம் கால்கள் நீரில் அலையத்துவங்கும்!

இந்தப் பாடல் பற்றி ஒரு பதிவில் முடிக்க இயலவில்லை. காலத்தின் நீள அகலங்களை நம் வசதிக்கேற்றபடி நீட்டவோ சுருக்கவோ, நினைக்கவோ மறக்கவோ நமக்கு உரிமை இருக்கிறதா என்ன? காலம் வரையும் வடிவத்திற்கேற்றவாறு படிந்து கிடக்கும் ஞாபகங்கள் தானே நம் மனதின் வடிவம்? எனவே அடுத்த பதிவிலும் "ஊரெல்லாம் உன் பாட்டு" தொடரும்...





Saturday, August 11, 2012

22. இளையராஜாவின் இயற்பியல் பகுதி 12


நமது வேர்கள் மூன்று விதமாக மண்ணில் படிந்திருக்கக் கூடும். ஒன்று - நகரத்திலேயே பிறந்து வளர்ந்து, கிராமங்களின் வாசனையை வாகனங்களில் கடக்கும் பொழுது மட்டும் நுகரும் வகை. இரண்டு - முந்தைய தலைமுறை கிராமத்தில் இருந்து, இன்றைய தலைமுறை நகரத்திற்கு மாறி, நினைவில்   மட்டும் கிராமங்களை சுமக்கும் நிலை. மூன்று - விட்ட குறை தொட்ட குறை கிராமத்தில் தொடர, என்றோ ஒரு நாள், நகரத்திலிருந்து கிராமம் சென்று நினைவை அறுவடை செய்து வருபவர்கள். வகைகள் மூன்று என்றாலும் அதன் வாசனை ஒன்றே!

சமீபத்தில் ஒரு பிற்பகல் வேளையில் மதுரை காரியாபட்டி அருகில் இருக்கும் எங்கள் "விட்ட குறை" கிராமத்திற்கு சென்றிருந்தேன். முன்பெல்லாம் மெயின் ரோட்டிலிருந்து இரண்டு கிலோமீட்டர் நடக்க வேண்டும். இப்போது கிராமம் வரை பஸ் போகிறது. ஆனால் அந்த நடையில் ஒரு சுகம் உண்டு. கால சுகம். புதிதாக போடப்படும் தார் சாலைகளில் நாம் நடக்கையில் செருப்பில் தார் ஒட்டுவது போல, சில சாலைகளில் நாம் நடக்கையில் கால்களில் காலம் ஒட்டிக் கொள்ளும். இது போன்ற‌ சாலைகளில் தாருக்குப் பதில் காலத்தை உருக்கி ஊற்றி விட்டார்களோ என்னவோ? அது இழுக்கும் இழுப்பில் நடையின் வேகம் தானாகவே தடைபடும். ஊருக்குள் செல்லும் பஸ்சை வேண்டுமென்றே தவறவிட்டு நடந்தேன். பஸ்ஸில் இருப்பவர்கள் பார்வையில் ஒரு பைத்தியக்காரன் நடந்து கொண்டிருந்தான். காலத்துடன் உறவாட சில சமயம் சற்று பைத்தியக்காரத்தனம் தேவைப்படுகிறது இல்லையா?

சிறு வயதில் கிராமத்துக்கு போகையில் எப்போது "கண்மாய்" பக்கம் போவாம் என்று இருக்கும். "சும்மா சும்மா" கண்மாய் பக்கம் போக வீட்டில் விட மாட்டார்கள் என்பதால் மதுரையில் இருந்து வேண்டுமென்றே "இயற்கை அழைப்பை" அடக்கிக் கொண்டு கிராமத்திற்கு போன நாட்கள் அவை. இப்படித்தான் ஏழாம் வகுப்பு விடுமுறையில் கிராமத்திற்கு "ஆர்வமுடன்" சென்றேன். வீடு முழுவதும் ஒரு சடங்கிற்கான ஏற்பாடுகளில் மூழ்கியிருக்க, யாருமறியாது கண்மாய் கரையோரம் நழுவினேன். கருக்கல் நேரம். கருவேல மரங்களின் ஒல்லியான நிழல்கள் கரையெங்கும் பரவியிருக்க, முட்டியளவு நீர் "சளக் சளக்" என்று அசைந்து கொடுக்க, நீர் அருகே அமர்ந்தேன். கண்மாயின் மறுபுறம் இருக்கும் காட்டில் முயல், நரிகள் உண்டு. ஏதேனும் கண்ணில் தெரிகிறதா என்று பார்த்த கண்களை மூட வைத்தது காது. எங்கள் கிராமத்திற்கு அருகே "நரிக்குடி" என்றொரு ஊர். அந்த ஊர் இருக்கும் திசையிலிருந்து காற்றில் பறக்கும் இலை போன்ற ஏறி இறங்கி, அங்கும் இங்கும் ஒழுங்கின்றி திரிந்தபடி காதுக்கு வந்தது "கண்ணா உன்னை தேடுகிறேன்" (உனக்காகவே வாழ்கிறேன் / 1986 / Ilayaraja / SPB - Janaki).

இது ஒரு சாதாரணமான பாடல்தான். ஆனால், கேட்பவர்களுக்கு தங்களுக்கென தயார் செய்யப்பட்ட ஞாபகங்களை தரக்கூடிய மந்திரச் சாவியினால் இப்பாட்டினைப் பூட்டியிருப்பார் இளையராஜா. காற்றின் கைவரிசையால் இந்த பாடலில் வரும் அழகான வயலின் இடங்கள், குறிப்பாக இரண்டாம் stanza துவக்கத்தில் விட்டு விட்டு  வரும் வயலின் இசை, கண்மாயின் இரு கரைகளிலும் மாறி மாறி குதித்து வருவது போல இருந்தது. அதே போல், பாடலின் துவக்கத்தில் வரும் வயலின்,  வீசும் காற்றில் கிராமத்தையே தட்டாமாலை சுற்றுவது போல இருந்தது. எண்பதுகளின் நடுவில் "உண்மையான‌ காதல்" செய்ய முயன்று அல்லது செய்து உழன்று, இன்று முதுமையின் அருகே இருக்கும் பலருக்கும் இந்தப் பாடலின் "ஈரமுள்ள கண்ணில் தூக்கமில்லை" வரிகள் இன்றும் ஞாபகம் இருக்கக்கூடும்.

இந்தப் பாடல் முடிந்ததும் "கால் கழுவ" மனமின்றி அப்படியே அமர வைக்கும் விதமாக வந்தது அதே படத்தின் "இளஞ்சோலை பூத்ததா..." . இந்தப் பாடல் ஆரம்பத்தில் வரும் SPB குரலும் புல்லாங்குழலும், நீரோட்டம் உள்ள இடத்தில், வானமே கூரையாக நாம் அமர்ந்து கேட்கும் பொழுது மாறுபட்ட அனுபவம் தருவது நிச்சயம். கவிதை வரியின் ஆழத்திற்கு வெகு அருகில் நம்மை இட்டுச் செல்லும் "ஒரு மௌனம் தீர்ந்தது" போன்ற வரிகள் வைரமுத்துவை எளிதாய் அடையாளம் காட்டும்.

நிறைய நேரம் ஆகி விட்டது போலும்...வீட்டிலிருந்து ஆள் தேடி வருவதும் உரத்த குரலில் என்னை அழைப்பதும் தொலைவில் தெரிந்தது. எத்தனை திட்டுக்கள் வாங்கினாலும் அவை இந்த ஞாபக தட்டுக்களை சேகரிக்க உதவியதாகவே இருந்தது அன்று.

சமீபத்திய பயணத்தில், அன்று கேட்ட அதே இடத்தில் நின்று கொண்டிருந்தேன் நான். கண்மாயில் ஒரு சொட்டுத் தண்ணீர் இல்லை. ஆடுகள் "மே(ய்) மே(ய்)" என்றபடி மேய்ந்து கொண்டிருந்தன. மண்ணுக்கும் நமக்குமான இன்றைய உறவை சொல்வது போல பாளம் பாளமாக தரை வெடித்திருந்தது. "கண்ணா உன்னை" பாடல் ஒலிப்பது போலவே மனதுக்கு  மனதுக்குத் தோன்றியது. நரிக்குடி பக்கம் கவனித்துப் பார்த்தும் காற்றின் ஒலி கூட கேட்கவில்லை.பாட்டு ஒலிக்க வேண்டும் என்ற எண்ணமா அல்லது ஏற்கனவே ஒலித்த கால பிம்பமா என்று யோசிக்கத் தேவையின்றி என்னைப் பின்னிழுத்துக் கொண்டிருந்தது காலம். ஒரு முறை கொடுத்து விட்டு மீண்டும் மீண்டும் நினைக்க வைப்பது தானே காலத்தின் மூளை! அதில் மூழ்கி மூழ்கி எழுவதுதானே மனதின் வேலை!