Saturday, August 11, 2012

22. இளையராஜாவின் இயற்பியல் பகுதி 12


நமது வேர்கள் மூன்று விதமாக மண்ணில் படிந்திருக்கக் கூடும். ஒன்று - நகரத்திலேயே பிறந்து வளர்ந்து, கிராமங்களின் வாசனையை வாகனங்களில் கடக்கும் பொழுது மட்டும் நுகரும் வகை. இரண்டு - முந்தைய தலைமுறை கிராமத்தில் இருந்து, இன்றைய தலைமுறை நகரத்திற்கு மாறி, நினைவில்   மட்டும் கிராமங்களை சுமக்கும் நிலை. மூன்று - விட்ட குறை தொட்ட குறை கிராமத்தில் தொடர, என்றோ ஒரு நாள், நகரத்திலிருந்து கிராமம் சென்று நினைவை அறுவடை செய்து வருபவர்கள். வகைகள் மூன்று என்றாலும் அதன் வாசனை ஒன்றே!

சமீபத்தில் ஒரு பிற்பகல் வேளையில் மதுரை காரியாபட்டி அருகில் இருக்கும் எங்கள் "விட்ட குறை" கிராமத்திற்கு சென்றிருந்தேன். முன்பெல்லாம் மெயின் ரோட்டிலிருந்து இரண்டு கிலோமீட்டர் நடக்க வேண்டும். இப்போது கிராமம் வரை பஸ் போகிறது. ஆனால் அந்த நடையில் ஒரு சுகம் உண்டு. கால சுகம். புதிதாக போடப்படும் தார் சாலைகளில் நாம் நடக்கையில் செருப்பில் தார் ஒட்டுவது போல, சில சாலைகளில் நாம் நடக்கையில் கால்களில் காலம் ஒட்டிக் கொள்ளும். இது போன்ற‌ சாலைகளில் தாருக்குப் பதில் காலத்தை உருக்கி ஊற்றி விட்டார்களோ என்னவோ? அது இழுக்கும் இழுப்பில் நடையின் வேகம் தானாகவே தடைபடும். ஊருக்குள் செல்லும் பஸ்சை வேண்டுமென்றே தவறவிட்டு நடந்தேன். பஸ்ஸில் இருப்பவர்கள் பார்வையில் ஒரு பைத்தியக்காரன் நடந்து கொண்டிருந்தான். காலத்துடன் உறவாட சில சமயம் சற்று பைத்தியக்காரத்தனம் தேவைப்படுகிறது இல்லையா?

சிறு வயதில் கிராமத்துக்கு போகையில் எப்போது "கண்மாய்" பக்கம் போவாம் என்று இருக்கும். "சும்மா சும்மா" கண்மாய் பக்கம் போக வீட்டில் விட மாட்டார்கள் என்பதால் மதுரையில் இருந்து வேண்டுமென்றே "இயற்கை அழைப்பை" அடக்கிக் கொண்டு கிராமத்திற்கு போன நாட்கள் அவை. இப்படித்தான் ஏழாம் வகுப்பு விடுமுறையில் கிராமத்திற்கு "ஆர்வமுடன்" சென்றேன். வீடு முழுவதும் ஒரு சடங்கிற்கான ஏற்பாடுகளில் மூழ்கியிருக்க, யாருமறியாது கண்மாய் கரையோரம் நழுவினேன். கருக்கல் நேரம். கருவேல மரங்களின் ஒல்லியான நிழல்கள் கரையெங்கும் பரவியிருக்க, முட்டியளவு நீர் "சளக் சளக்" என்று அசைந்து கொடுக்க, நீர் அருகே அமர்ந்தேன். கண்மாயின் மறுபுறம் இருக்கும் காட்டில் முயல், நரிகள் உண்டு. ஏதேனும் கண்ணில் தெரிகிறதா என்று பார்த்த கண்களை மூட வைத்தது காது. எங்கள் கிராமத்திற்கு அருகே "நரிக்குடி" என்றொரு ஊர். அந்த ஊர் இருக்கும் திசையிலிருந்து காற்றில் பறக்கும் இலை போன்ற ஏறி இறங்கி, அங்கும் இங்கும் ஒழுங்கின்றி திரிந்தபடி காதுக்கு வந்தது "கண்ணா உன்னை தேடுகிறேன்" (உனக்காகவே வாழ்கிறேன் / 1986 / Ilayaraja / SPB - Janaki).

இது ஒரு சாதாரணமான பாடல்தான். ஆனால், கேட்பவர்களுக்கு தங்களுக்கென தயார் செய்யப்பட்ட ஞாபகங்களை தரக்கூடிய மந்திரச் சாவியினால் இப்பாட்டினைப் பூட்டியிருப்பார் இளையராஜா. காற்றின் கைவரிசையால் இந்த பாடலில் வரும் அழகான வயலின் இடங்கள், குறிப்பாக இரண்டாம் stanza துவக்கத்தில் விட்டு விட்டு  வரும் வயலின் இசை, கண்மாயின் இரு கரைகளிலும் மாறி மாறி குதித்து வருவது போல இருந்தது. அதே போல், பாடலின் துவக்கத்தில் வரும் வயலின்,  வீசும் காற்றில் கிராமத்தையே தட்டாமாலை சுற்றுவது போல இருந்தது. எண்பதுகளின் நடுவில் "உண்மையான‌ காதல்" செய்ய முயன்று அல்லது செய்து உழன்று, இன்று முதுமையின் அருகே இருக்கும் பலருக்கும் இந்தப் பாடலின் "ஈரமுள்ள கண்ணில் தூக்கமில்லை" வரிகள் இன்றும் ஞாபகம் இருக்கக்கூடும்.

இந்தப் பாடல் முடிந்ததும் "கால் கழுவ" மனமின்றி அப்படியே அமர வைக்கும் விதமாக வந்தது அதே படத்தின் "இளஞ்சோலை பூத்ததா..." . இந்தப் பாடல் ஆரம்பத்தில் வரும் SPB குரலும் புல்லாங்குழலும், நீரோட்டம் உள்ள இடத்தில், வானமே கூரையாக நாம் அமர்ந்து கேட்கும் பொழுது மாறுபட்ட அனுபவம் தருவது நிச்சயம். கவிதை வரியின் ஆழத்திற்கு வெகு அருகில் நம்மை இட்டுச் செல்லும் "ஒரு மௌனம் தீர்ந்தது" போன்ற வரிகள் வைரமுத்துவை எளிதாய் அடையாளம் காட்டும்.

நிறைய நேரம் ஆகி விட்டது போலும்...வீட்டிலிருந்து ஆள் தேடி வருவதும் உரத்த குரலில் என்னை அழைப்பதும் தொலைவில் தெரிந்தது. எத்தனை திட்டுக்கள் வாங்கினாலும் அவை இந்த ஞாபக தட்டுக்களை சேகரிக்க உதவியதாகவே இருந்தது அன்று.

சமீபத்திய பயணத்தில், அன்று கேட்ட அதே இடத்தில் நின்று கொண்டிருந்தேன் நான். கண்மாயில் ஒரு சொட்டுத் தண்ணீர் இல்லை. ஆடுகள் "மே(ய்) மே(ய்)" என்றபடி மேய்ந்து கொண்டிருந்தன. மண்ணுக்கும் நமக்குமான இன்றைய உறவை சொல்வது போல பாளம் பாளமாக தரை வெடித்திருந்தது. "கண்ணா உன்னை" பாடல் ஒலிப்பது போலவே மனதுக்கு  மனதுக்குத் தோன்றியது. நரிக்குடி பக்கம் கவனித்துப் பார்த்தும் காற்றின் ஒலி கூட கேட்கவில்லை.பாட்டு ஒலிக்க வேண்டும் என்ற எண்ணமா அல்லது ஏற்கனவே ஒலித்த கால பிம்பமா என்று யோசிக்கத் தேவையின்றி என்னைப் பின்னிழுத்துக் கொண்டிருந்தது காலம். ஒரு முறை கொடுத்து விட்டு மீண்டும் மீண்டும் நினைக்க வைப்பது தானே காலத்தின் மூளை! அதில் மூழ்கி மூழ்கி எழுவதுதானே மனதின் வேலை!

4 comments:

  1. எழுத்து நடை அருமை...
    தொடர வாழ்த்துக்கள்... நன்றி...

    ReplyDelete
  2. ஒரு முறை கொடுத்து விட்டு மீண்டும் மீண்டும் நினைக்க வைப்பது தானே காலத்தின் மூளை! அதில் மூழ்கி மூழ்கி எழுவதுதானே மனதின் வேலை!//

    அதனை ரசிக்கக் கூடிய மனமும்
    அதனை படிப்பவரும் உணரும் வண்ணம்
    படைப்பாக்கித் தரும்
    எத்தனி பேருக்குத்தான் உள்ளது
    தங்களைப்போல
    மனம் கவர்ந்த பதிவு
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  3. உலக மகா ரசிகனா இருப்பீங்க போலிருக்கு

    ReplyDelete
  4. இது ஒரு சாதாரணமான பாடல்தான். ஆனால், கேட்பவர்களுக்கு தங்களுக்கென தயார் செய்யப்பட்ட ஞாபகங்களை தரக்கூடிய மந்திரச் சாவியினால் இப்பாட்டினைப் பூட்டியிருப்பார் இளையராஜா.

    அடடா ! (’அழகுடா கண்ணா’ன்னு சொல்லணும் போல இருக்கு, தம்பி!)

    ReplyDelete