Sunday, September 29, 2013

38. ஆனந்த யாழை மீட்டுகிறாய்...

அவசரமாக ஓடிக் கொண்டிருக்கும் நகரத்தின் மீது இரவை இழுத்துப் போர்த்தி ஆசுவாசப்படுத்திக் கொண்டிருந்தது காலம். இருப்பினும், அந்த ரயில் நிலையத்தில், காலத்தின் பகடை ஆட்டத்தில் தங்கள் மீது விழுந்த ஏதோ ஒரு நிகழ்தகவின் பொருட்டு எத்தனையோ பேர் எதனையோ தங்கள் எதிர்பார்ப்பாக்கி பயணத்தை துவக்க விரைந்து கொண்டிருந்தனர். அவர்களில் நானும் ஒருவன். எனது கம்பார்ட்மெண்ட் நோக்கி சென்று கொண்டிருக்கையில் பிளாட்பாரத்தில் தொங்க விடப்பட்டிருந்த டிவிகளில் இருந்து விளம்பரங்களுக்கிடையில் ஒலித்தது ஒரு குரல். "மகள்களை பெற்ற அப்பாக்களுக்கு மட்டும்தான் தெரியும் ‍ முத்தம் காமத்தில் சேர்ந்ததில்லை என்று..." - "மட்டும்தான்" என்பது இந்த வரியின் பொருளை குறுக்கினாலும், ஒரு பெருங்கவிதை வெளியை நமக்கு(ள்) நாமே உருவாக்கி ஞாபக பாத்திகளின் வழியே கால நீருற்றி உணர்வின் பூக்கள் பூத்துக் குலுங்கும் நினைவுத் தோட்டத்திற்கான விதைகள் அந்த ஒற்றை வரிக்குள் ஒளிந்திருந்தன...சிலருக்கு இந்த வரி அர்த்தமற்றதாக தோன்றுகிறது. அர்த்தமுள்ளதோ அர்த்தமற்றதோ, இரண்டுமே நம் நினைப்பின் ரசம் பூசி நாம் எண்ணுவதையே சரி என்பது போல் காட்டும் மனக்கண்ணாடியின் மாயம் தானே?

எனது பெட்டியை அடைவதற்குள் இரண்டு மூன்று டிவிக்களை தாண்டியதில், அது ஒரு புதிய திரைப்படத்தின் விளம்பரம் என்ற செய்தியை கண்ணும் காதும் மூளையில் பதிய வைத்திருந்தது. அந்த வரியைத் தொடர்ந்து, ரயில் நிலையத்தின் நெரிசலையும் சத்தங்களையும் மீறி, வயல் வெளிகளில் நெற்கதிர்களின் தலை மேல் இறங்கி ஏறி ஒரு வித லயம் கலந்த அசைவுடன் சத்தமின்றி நம்மிடம் வந்து சேரும் சுகமான காற்றைப் போல ஒரு இசைத் துகள் என்னை சில நொடிகள் வருடிப் போனது. அதைத் தொடர்ந்து "ஆனந்த யாழை மீட்டுகிறாய்" என்றொரு குரல் மக்கள் திரளில் எழுந்த இரைச்சல்களின் ஊடே பயணம் செய்து உள்ளத்தின் ஏதோ ஒரு ஊற்றுக்கண்ணைத் திறப்பது போல இறங்கியது.. எனது இருக்கையில் அமர்ந்த பின்னும் அந்த "சுகமான காற்று" தீண்டுவது போன்ற உணர்வில் ஆழ்ந்திருந்தேன். அந்த இசைத் துகள் அவ்வப்பொழுது என்னுள் நகர்ந்து கொண்டே இருப்பது போன்ற உணர்வின் அசைவுடன்...

உலகியல் வேலைகளின் பின்னே மந்தையின் நடுவில் சிக்கிய ஆடு போல நாம் ஓடும் பொழுது, உள்ளத்தின் தேவைகளை அறிந்து அதன் வழியில் நம்மை ஆற்றுப்படுத்தும் அற்புத கருவியாய் கலைவடிவங்கள் தானே நம் ஆன்மத்தின் ஆதார ஸ்ருதியை நமக்கு மீட்டுக் கொடுக்கின்றன? எனவே தான் அவை இடம் பொருள் ஏவல் மீறி எங்கோ ஒரு நொடியில் நமக்குள் புகுந்து கொள்கின்றன. அப்படித்தான் அன்று நுழைந்தது "ஆனந்த யாழ்..."

சில தினங்கள் கழித்து ஒரு இரவில், அறையில் இருந்த என்னை சீக்கிரம் வரச்சொல்லி அழைத்த மனைவியின் குரல் ஹாலில் இருந்த டிவியின் முன் நிறுத்தியது. டிவியில், ஒரு புல்வெளி முழுவதும் புகுந்து நகரும் காற்று, திரையை விட்டிறங்கி நம் மேல் வீசுவது போல‌ ஆனந்த யாழை மீட்டிக்கொண்டிருந்தது. "உங்க லிஸ்டுல சேர்ந்துரும் போல" என்றார் என் மனைவி. "உங்க லிஸ்ட்" என்றால் என் அடி மனதின் சுவற்றில், ஒரு குகையின் சுவற்றில் வழியும் ஏதோ ஒரு ஊற்றின் நீர் கசிவு போல ஆங்காங்கே வழிந்தபடி இருக்கும் பாடல்களின் வரிசையில் இதுவும் இனி ஊறத்துவங்கும் என்று பொருள்.

"தங்க மீன்கள்" வேண்டி கணிணியில் "வலை" வீசி எனது ஒலிப்பேழையில் பிடித்து நீந்த விட்டேன். இரண்டு மாதங்களாக இரவில் துயில்வதற்கு முன் ஒலிப்பேழையிலிருந்து உள்ளத்தின் உள்ளே குதித்து நீந்தி விட்டு போவதை வழக்கமாக கொண்டிருந்தன "ஆனந்த யாழை" மற்றும் "நதி வெள்ளம் மேலே" என்னும் இரண்டு மீன்கள். செதில் செதிலாக அதில் பதிந்து இருந்தன உணர்வின் தறி ஏறக் காத்திருந்த இசையின் இழைகள். நெய்து நெய்து இழைகள் கூழாகி விழிப்படலத்தின் மீது நீரின் திரைச்சீலைகளை உருவாக்கும் மீன்கள் அவை.

இவ்வாறாக இசைப்பேழையில் என்னுடனேயே வந்து கொண்டிருந்தன இந்த மீன்கள். அலுவலகத்திலிருந்து ஒரு தினம் வேலை முடித்து நள்ளிரவை நெருங்கும் பின்னிரவு வேளையில் வீடு திரும்பிக் கொண்டிருந்தேன்.
மாலை துவங்கிய மழை, ஆள் நடமாட்டம் குறைந்த பின், முழு சுதந்திரம் கிடைத்தது போல சாலை முழுவதும் ஆட்டம் போட்டுக் கொண்டிருந்தது. காற்றுடன் கைகோர்த்து அதன் நடனத்தின் வழியெங்கும் மரத்திலிருந்து இலைகளை பிடித்து, சாலையின் ஈரத்தில் ஒட்டி ஓடியாடிக் கொண்டிருந்தது மழை. கரும்பலகையில் வரைந்த நூற்றுக்கணக்கான இலைகளின் ஓவியம் போல தார்ச் சாலையெங்கும் இலைகள் ஒட்டிக் கொண்டிருந்தன.

"நதி வெள்ளம் மேலே" துவங்கியது. இரண்டாம் ஸ்டான்ஸா துவக்கத்தில் வரும் குழலுக்கு ஏற்றவாறு, இருட்டிப்போய் ஆளரவமற்று இருந்த சாலையின் மரங்களிலிருந்து மழை சொட்டுகள் வெவ்வேறு கிளைகளிலிருந்து வெவ்வேறு இடைவெளியிலிருந்து உதிர்ந்து சாலையில் கலந்து நகர்ந்து கொண்டிருந்தன. சாலையில் என்னையும் மழையையும் தவிர யாருமில்லை. வண்டியை ஒரு நிமிடம் நிறுத்தலாம் எனத் தோன்றியது. பாடலை மீண்டும் ஓட விட்டேன். மரங்கள் அனைத்தும் ஏதோ துயரத்தின் வெளியில் தங்களை மெதுவாக அசைத்து கண்ணீர் சிந்துவது போல ஒரு மிகப்பெரும் சித்திரமாக சாலை என் முன் மாறியது. இப்பாடல் பாடியவர் பல்வேறு ஏற்ற இறக்கங்களில் ஜெயச்சந்திரனை ஞாபகப்படுத்தி எழுபதுகளிலும் எண்பதுகளிலும் நம்மை மூழ்க வைக்கிறார்.

இரவும் மழையும் இணையும் பொழுதுகளில் இந்த இரண்டு பாடல்களுமே நமக்குள் நன்றாக ஊடுருவுகிறது. கையடக்க ஒலிப்பேழை அத்தகைய இரவுகளை எதிர்நோக்கி என்னருகில் காத்திருக்கிறது.

Sunday, July 7, 2013

37. இளையராஜாவின் இயற்பியல் பகுதி 22

ஒரு மழை நமக்குள் பல நினைவுகளைத் தந்து போகக்கூடும். கெட்டித்து போன மண் மேல் முதலில் துளித்துளியாய் ஒட்டி, பிறகு மெல்ல பெருமழையாய் கொட்டி, இறுகியிருந்த மண் நெகிழ்ந்து, ஈரத்தினால் குழைந்து ஒரு வாசனை கிளம்புமே...அது மழை வாசமா? மண் வாசமா? அல்லது அந்தப் பொழுதுகள் நமக்குள் கிளப்பும் நினைவின் வாசமா?

மழைக்கும் மனதுக்கும் இடையே கிடக்கும் நினைவுப் புதையல்களை தோண்டி எடுக்கும் வேலையை சில பாடல்கள் செய்யும். பெருமழை பொழுதில் பேருந்துக்குள் அமர்ந்திருக்கிறீர்களா? மழையை ரசிக்கும் மனிதர்கள் பேருந்துகளுக்குள் இருப்பார்கள் என்று மழைக்குத் தெரியும் போலும். "நான் வெளியில் வந்திருக்கிறேன். உள்ளே என்ன செய்கிறாய்?" என்பது போல பேருந்தின் உலோகத் தகடுகளை தன் எண்ணற்ற கரங்களால் தட்டி நம்மை வெளியே வரச் சொல்லுவது போல அடித்துச் செல்லும் மழையின் சத்தம். அத்தகைய மழை தினத்தில் மழையின் வடிவத்தில் ஏறி மனதில் படிமமாய் ஊறிய‌ ஒரு பாடல், ஆயுளுக்கும் நினைவின் கிறக்கத்தை மனதுக்குள் இறக்கிச் செல்வதில் அதிசயமில்லை.

"பூமி குளிரட்டும் நல்லா அடிச்சு பெய்" என்று மழையிடம் பேசிக் கொண்டிருந்தார் ஜன்னலோரம் அமர்ந்திருந்த பாம்படம் அணிந்திருந்த ஒரு பக்குவப்பட்ட மூதாட்டி. அவரின் பேச்சை ரசித்தது போல‌, காற்றின் வழி பிடித்து தேடி வந்து கூடுதல் சாரல்களை அவர் மேல் கொட்டி கன்னத்தில் தட்டி விட்டுப் போனது மழை. நரைத்திருந்த அவரின் கூந்தலில் ஆங்காங்கே நட்சத்திரங்கள் போல மின்னிக் கொண்டிருந்தன மழையின் துளிகள். வானம் பார்த்து காத்திருந்து பாளம் பாளமாக பிளவுபட்ட‌ நிலத்தின் மீது பொழியும் மழை அந்தப் பிளவுகள் நோக்கி வழிந்தோடுவது போல, வயதின் சுருக்கங்கள் குறுக்கும் நெடுக்குமாய் ஓடிய அந்த மூதாட்டியின் கன்னத்தில் இறங்கிய மழைத்துளிகள் அந்தச் சுருக்கங்கள் தந்த பிளவுகள் நோக்கி வழிந்து கொண்டிருந்தன. வழியும் மழைத்துளிகளிடம் வசப்பட்டதாலேயோ என்னவோ, துடைக்கும் நினைப்பின்றியோ மனமின்றியோ அமர்ந்திருந்தார் அவர்.

சற்றே ஓய்ந்தது போலிருந்த மழையின் ஒலியை வைத்து சாளரங்களை நன்றாக திறந்து வைக்கத் துவங்கினர் பயணிகள். அரசு பேருந்துகளுக்கே உரித்தான‌, விரித்தால் மடிக்க முடியாத, மடித்தால் விரிக்க முடியாத‌ ஷட்டரை முக்கால் பாகம் மேலேற்றி "ட" வடிவிலிருக்கும் துருப்பிடித்த இரும்பினுள் அடைக்கும் முயற்சியில் ஒரளவு வெற்றி அடைந்து அமர்ந்திருந்தேன் நான்.

பேருந்து நிலையத்தின் மேடு பள்ளங்களில் தேங்கியிருந்த மழை நீரின் மேல் விழுந்து சிதறும் தூறல்கள் நீரில் சிறு வட்டங்களைத் தோற்றுவித்து, அந்த வட்டங்களுக்குள் தோன்றும் புது வட்டம் சிறு வட்டங்களை பெருவட்டங்களாய் மாற்றி, விரிந்து கொண்டே போகும் வட்டம், ஏதோ ஒரு நொடியில் மறைந்து...புதிதாய் ஒரு வட்டம் நுழைந்து...இதுவே சுழற்சியாய்..மழை போடும் நீர் வட்டத்தின் ஆரம் போல பெருகிக் கொண்டே போகும் நினைவின் சாரம் சட்டென்று இன்னொரு நினைவைத் தோற்றுவித்து...அது பெருகி....ஒரு துளியின் தடத்தில் மறுதுளி...வட்டங்களுக்குள் வட்டங்கள்...நினைவுகளுக்குள் நினைவுகள்!

இந்தச் சுழற்சியை இசையின் பாதைக்குள் பொருத்தியது போல, நம்மையே அந்தச் சுழற்சியின் மையப் புள்ளியில் இருத்தியது போல, அடிமனதில் மெதுவாக அசையும் உணர்வுகளின் ஒலிவடிவம் போலத் துவங்கியது ஒரு பிளாட்பாரத்தில் இருந்த தேநீர் கடை ஒன்றிலிருந்து ஒலிக்கத் துவங்கிய "நிலவே நீ வர வேண்டும்" பாடலின் ஆரம்பத்தில் வரும் அந்த அற்புதமான கிடார்.

பாடல் முடியும் வரை பேருந்தை கிளப்பாமல் இருக்க வேண்டுமே என்ற எண்ணம் எனக்கு. தள்ளித் தனியே நின்றிருந்த ஓட்டுனர் தேநீர் கிளாசை சுழற்றியபடி அதிலிருந்து வெளியேறும் ஆவியை பார்த்தபடி இருந்தார். ஒரு வேளை அவரும் இந்தப் பாடல் முடியும் வரை காத்திருக்க நினைத்திருந்தாரோ என்னவோ? எவருக்குத் தெரியும் எவரின் நினைப்பு?

கரையிலிருந்து நீண்டு, நதியின் மீது படர்ந்திருக்கும் கிளைகளை உடைய மரத்தின் இலைகள் உதிர்ந்து நீரோட்டத்தில் மிதந்து செல்வது போல, இந்தப் பாடல் முழுவதுமே "bass guitar" மேல் மிதந்து நகர்கிறது. அந்தக் கிளையின் நிழல், தண்ணீரின் அசைவுக்கு ஏற்ப ஆடுவது போலத்தானே நம் நினைவுகளும் இந்தப் பாடலின் ஊடே அசைகிறது...நீரோட்டம் ஆங்காங்கே எழும்பி அடங்குகையில் அதன் மேலேறி இறங்கும் இலையின் பயணத்தை ஒத்ததாக இருக்கிறது "bass guitar" மேலே ஏறி இறங்கும் வரிகள்.. நினைவுகள் கொப்பளித்து நிகழ்காலத்தின் கோப்பையை மீறி வழிவது போல, ஆங்காங்கே அடியிலிருந்து மேலேறி வரிகளின் இடைவெளியில் பொங்கி உள்ளடங்கும் நொடிகள் அவை.

நம் உணர்வுகளை பகிர்ந்து கொள்ளும் ஊடகமாக மழை மாறிப் போகும் அதிசயத்தை முதல் ஸ்டான்ஸா துவக்கத்தில் வரும் புல்லாங்குழலில் புரிய வைக்கிறார் இளையராஜா. நம் மேல் விழும் மழைத்துளி உடலின் மீது வழிந்தோடும் வழித்தடங்களுக்கு எத்தனை சாத்தியக்கூறுகள் உள்ளனவோ அத்தனை சாத்தியங்கள், அந்த துளியின் நகர்வு எத்தகைய நினைவின் துளிகளை நம்மிலிருந்து மீட்டெடுக்கும் என்பதற்கும் உண்டு. ஜன்னலின் மீது சாய்ந்து வானத்தை பார்த்தபடி இருந்த என் முகத்தை தாங்கியிருந்த கைகளின் மீது இறங்கி, மழையின் ஒரு குமிழ் அதற்குரிய நீர்த்தடத்தை உருவாக்கி விரல் நோக்கி நகர்ந்து கொண்டிருந்தது. அந்த புல்லாங்குழலின் தடம், குமிழின் தடத்தை ஒத்ததாகி ஒலித்தது. மழையின் குமிழும் புல்லாங்குழலும் அங்கு என்னவாகிப் போனது? மழையின் குமிழ், காலக் குமிழாகி, அது வேகமாக‌ உருண்டோடி, புல்லாங்குழலின் உள்ளோடி, ஒவ்வொரு துளையிலிருந்தும் சொட்டும் நினைவுகளின் சத்தத்தில் உள்ள உயிரின் ஸ்வரம்தானோ அந்த முதல் ஸ்டான்ஸா புல்லாங்குழல்? அத்தகைய சொட்டுக்களை வாங்கி, நமக்குரிய உணர்வுகளில் தாங்கி, மறுபடி நம் மனதுக்குள்ளேயே ஊற்றுகிறதோ அதன் பின் வரும் வயலின்?

பெய்து போன மழை நெய்து வைத்த மிச்சம் போல ஜன்னலின் விளிம்புகளில் மாலையாக கோர்த்திருந்த மழைத்துளிகள் ஒவ்வொன்றாக என் உச்சந்தலையில் இறங்கின. அந்த சிலிர்ப்பின் ஊடுருவல் மெதுவாகத் துவங்கி, மேலோங்கி வளர்ந்து, மனம் முழுதும் படர்ந்து நிற்கும் பொழுதுகளைத் தான் இரண்டாம் சரணத்திற்கு முன்னர் வரும் கிடாரும் வயலினும் தருகிறதோ? மனதில் தோன்றும் நினைவின் சிலிர்ப்புகள் இப்படித்தான் நிகழுமோ?

தமிழ் வகுப்புகளில் நாம் "மாத்திரை" பற்றி படித்திருப்போம். சொற்களுக்கான உச்சரிப்பின் கால அளவு "மாத்திரை" என்று தமிழாசிரியர் சொல்லும் பொழுதே சொற்கள் ஒரு குறிப்பிட்ட அளவின் வடிவமைப்பில் வாயில் உருள்வது போல இருக்கும். இப்பாடலில் "நீயின்றி வாடுதே...", "துன்பங்கள் சேர்ந்ததே" [முதல் ஸ்டான்ஸா] மற்றும் "மாயங்கள் செய்வதே...", "காயங்கள் ஆனதே..." [இரண்டாம் ஸ்டான்ஸா] என்னும் வரிகளின் அடியில் இளையராஜா என்ன செய்கிறார்? அந்த "bass guitar" இந்த வார்த்தைகளின் "மாத்திரைகளை" அப்படியே சாப்பிட்டு அதன் வடிவிலேயே வரிகளோடு உருகி ஓடுகிறதே...நினைவின் கரடு மேல் எத்தனை லாவகமாக நம்மை ஏற்றி இறக்குகிறார் இளையராஜா!

மழை, தான் தொடும் அனைத்தின் மீதும் காலத்தை ஊற்றி விட்டு போய்விடுகிறது. நனைதலும் காய்தலும் மனதுக்கே உரிய மழையின் சொல்லாடல்கள் தானே? மழை என்பதே நினைவுக்கான காலத்தின் குறியீடுதானே? இசையும் அத்தகையது தான் இல்லையா?

குறிப்பு: இதே பாடல் தந்த மற்றொரு அனுபவம் வாசிக்க இங்கே செல்லவும்... 

Sunday, May 19, 2013

36. இளையராஜாவின் இயற்பியல் பகுதி 21


நம்மில் நிறைய பேருக்கு, நேரடியாகவோ அல்லது எவர் மூலமாகவோ ஏதோ ஒரு கிராமத்துத் தொடர்பு இருக்கும். இன்னும் சொல்லப் போனால், ஏதோ ஒரு கிராமத்து பெருமரத்தின் மீது தொடர்ந்து அடித்த தலைமுறை காற்றினால், நகர்ந்து நகர்ந்து பெருநகரம் ஒன்றில் வந்து படிந்த இலைகளில் ஒன்றாக நாம் இருக்கக் கூடும்.

நச்சு மிகுந்த நகர வாழ்க்கையை "நச்"சென்று இருப்பதாக நினைத்துக் கொண்டு வாழத்துவங்கி பல ஆண்டுகள் ஆகி விட்டாலும், கிராமத்து வாசனை நமக்குள் எங்கோ ஒரு ஓரத்தில் ஒளிந்து கொண்டிருக்கும். மழை வர எத்தனிக்கும் மாலையில் நெரிசல் மிகுந்த நகரத்து சாலையில் வாகனத்தில் அமர்ந்திருக்கும் பொழுது வந்து வீசும் மண்வாசனையிலோ, "அளவாக பயன்படுத்த" அறிவுறுத்தப்பட்டு, ஒரு வாளி நீரில் குளியல் முடிக்க ஒரு கோப்பையை அந்த வாளிக்குள் விடும் பொழுது தெறிக்கும் நீரிலோ... சாலையை கடக்கையில் சட்டென்று கண்ணில் படும் மரத்தின் பச்சையிலோ...சும்மாடு வைத்துக் கொண்டு போகும் ஏதேனும் ஒரு மூதாட்டியை பார்க்கையிலோ...திடீரென்று அந்த கிராமத்து வாசனை எட்டிப் பார்க்கும். அந்த வாசனை, அப்படியே புகை போல மெலிதாக படர்ந்து நம்மை நம் நினைவில் இருக்கும் கிராமம் நோக்கி இட்டுச் செல்லும்...

சிறு வயதிலிருந்தே எங்கள் வீட்டில் அனைவருமே எங்கள் கிராமத்தை "கிராமம்" என்று சொல்லித்தான் கேட்டிருக்கிறேன். அப்பாவை அப்பா என்று அழைப்பது போலவும் அம்மாவை "அம்மா" என்று அழைப்பது போலவும், ஊருக்கு பெயர் இருந்தாலும் கிராமத்தை "கிராமம்" என்றே எங்கள் வீட்டு முதியவர்கள் அழைத்து அது அப்படியே நிலைத்து விட்டது போலும்...

ஒரு தாத்தாவின் எண்பதாவது ஆண்டு நிறைவுக்குத்தான் நான் முதல் முறையாக "கிராமத்துக்கு" அழைத்துச் செல்லப்பட்டேன். வெட்டவெளியில் வீசும் காற்றும் அதில் கலந்து வரும் வயக்காட்டு வாசனையும் தான் சட்டென்று ஈர்த்தது. பிற்பகல் மூன்று மணிக்கு மேல் கிராமத்தின் பெரும்பான்மையான தோட்டங்களில் பம்பு செட் மோட்டார் ஓட விடுவார்கள்.

பெரிய கிணறு. அதையொட்டி ஒரு மோட்டார் ரூம். இறைத்த நீர் வயலில் பாய்ந்தோட வசதியாக ஒரு பெரிய சிமிண்ட் தொட்டி. "தொப தொப" என்று அந்த தொட்டியில் நம் தலைக்கு மட்டும் தயார் செய்யப்பட்ட அருவி போலக் கொட்டும் நீரைத் தரும் பெரிய குழாய். அனைத்து தோட்டங்களிலும் அமைப்பு பெரும்பாலும் இப்படித்தான் இருந்தது. நான்கைந்து பேர் மிதந்து சுற்றி வரும் அளவு பெரியதாக தொட்டி இருக்கும்.

இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன், காலம் தினம் தினம் தின்று பழகிய ஒரு பிற்பகல் எனக்கு மட்டும் புதிதாய்...குடும்பத்துக் கூட்டத்துடன் வரப்புகளின் ஊடே நடந்து வயல்களுக்கு நடுவில் இருந்த கிணற்றை அடைந்திருந்தேன் நான். தொட்டி நிறைந்து பெருக்கெடுத்த நீரோட்டத்தை புசித்துக் கொண்டிருந்தன வயல்கள். இயற்கை இப்படித்தான் நீர் அருந்தும் போலும்...அந்த வயல்வெளியே ஒருவித வாசனையின் மயக்கத்தில் கிடந்தது. பச்சை நிறத்தை சக்கையாய் பிழிந்து வடிகட்டியது போல காற்றில் அடிக்கும் வயல்களின் வாசனை.

தொட்டிக்குள் "விடப்பட்ட" எனது கழுத்தளவுக்கு நீர் இருந்ததால் கடல் போலத் தெரிந்தது எனக்கு. இறங்கு வெயிலில் நீரின் மேல் தங்க முலாம் பூசிக்கொண்டிருந்தது சூரியன். குழாயின் அருகில் சென்றாலே மூச்சு முட்டும் அளவு நீர் விழுவதும், தள்ளி வந்து இளைப்பாறுவதுமாய் நீரில் கரைந்து கொண்டிருந்தேன் நான். அப்பொழுதுதான், ஊரின் கடைக்கோடியில் இருக்கும் வீட்டில் ஏதோ "கிடா விருந்து" காரணமாக கடந்து போன பல்வேறு பாடல்களுக்குப் பின், குழாய் ஒலிப்பெருக்கியிலிருந்து மெதுவாக வழிந்து, ஈரமேறிப் போயிருந்த என் உடம்பின் துளைகளில் நுழைய வழிபார்த்து வருவது போல துவங்கியது அந்த "humming" (மெட்டி / 1982 / இளையராஜா / ஜானகி].

பாடலின் நகர்விற்கேற்ப, என்னையறியாது நான் மல்லாந்து மிதந்த படி வானத்தை பார்க்கத் துவங்கியிருந்தேன். வெயிலில் வெளீர் நீலத்தில் விரிந்திருக்கும் வானத்தில் ஆங்காங்கே ஒட்டியிருந்த மேக திட்டுக்கள் நகர்கிறதா...நான் நகர்கிறேனா அல்லது பாட்டு இரண்டையுமே நகர்த்துகிறதா என்று தெரியாத மயக்கத்தை கொடுத்தது.

humming முடிவதற்கும் பாட்டு துவங்குவதற்கும் இடைப்பட்ட நொடிகளில் பரவும் இசை, பம்பு செட் தொட்டியிலிருந்து பெருகியோடும் சிற்றோடை நீர் ஆங்காங்கே மண்ணால் உறியப்பட்டு, சட்டென்று ஒரு உடைபட்ட இடத்தில் சற்றே கொப்பளித்து வயலுக்குள் விழும் நிகழ்வின் உணர்வு போல இருக்கும்.

முதல் ஸ்டான்ஸாவின் துவக்கத்தில் வரும் வயலினையும் புல்லாங்குழலும் காற்றில் ஏறி அமர்ந்து, நெற்கதிர்களின் மீது தவழ்ந்து வருவது போல இருந்தது. அதனால் வயலே ஒருவித ஸ்வரத்தின் கட்டுக்குள் அசைந்தாடுவது போன்ற ஒரு ஏகாந்தமான காட்சியில் குளித்துக் கொண்டிருந்தேன்...

இரண்டாவது ஸ்டான்சாவின் துவக்கத்திலும் ஒரு அற்புதத்தை ஹம்மிங்கிலும் இசைகோர்வையிலும் வைத்திருப்பார் இளையராஜா. மேகத்திலிருந்து யாரோ நம்மை தூளியில் தொங்க விட்டு நீருக்குள் ஆட்டிவிடும் பரவசத்தை கொடுக்கும் அது.

இந்தப் பாட்டின் கிடார் strokes அனைத்துமே, நாம் மெதுவாக குளிர்ந்த நீரில் கால் வைத்து, படிப்படியாக உடல் முழுதும் நனைந்து பின்னர் அந்த ஈரம் மனதுக்குள்ளும் குளிரூட்டும் வரை ஏற்படும் சிலிர்ப்புகளின் ஏற்பாட்டை அவ்வப்பொழுது சுண்டி விடுவது போலவே பரவசமூட்டும்.

சமீபத்தில் மதுரைக்கு சென்றிருந்த போது, உறவினருக்கு போன் செய்து, "மோட்டார்" போடுவார்களா என்று உறுதி செய்து கொண்டு கிராமத்துக்கு போனேன். காயந்து போன வயல்கள் கடந்த காலம் போல் பார்வைக்கு வறண்டு அடியில் தாகத்துடன் இருந்தன. "இப்பல்லாம் கிணத்து தண்ணீ உப்பு கரிக்குது" என்றார் தோட்டத்துக்கு போகும் வழியில் குறுக்கிட்ட கிராமத்துக்காரர் ஒருவர். காலமே, கடக்க கடக்க எங்கோ ஒரு ஓரத்தில்  உவர்ப்பை உதிர்த்த‌ படிதானே இருக்கிறது?

பராமரிப்பின்றி பழுதான கிணறு. சிறு வயதில் புதிதாய் இருந்த தொட்டியின் நிறைய இடங்களில் தோல் உதிர்ந்து அதன் எலும்பு தெரிந்தது.  இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்னர் வந்து போன அந்த மதியம்...அதில் குளித்தவர்களின் நினைப்பிலிருந்து தெறித்த ஏதோ சில துளிகள்...அவையெல்லாம் இந்த பெயர்ந்து போன காரைப் பொடிகளில் தேங்கியிருக்கக்கூடும். எங்கெங்கும் என்றென்றும் தேங்குவதன் பெயர்தானே காலம்?

கண்கள் சிவக்க நனைந்து காய்ந்து நனைந்து காய்ந்து குளித்துத் தீர்த்தேன். எந்த வித பாட்டும் இப்போது இல்லை. காற்று மட்டும் காலத்தின் பாட்டை பாடியபடி திரிந்து கொண்டிருந்தது. இருட்டத் துவங்கியதால் வேறு வழியின்றி துண்டை எடுத்து துவட்டத் துவங்கினேன். அது என்னை துவட்டுவதற்கு பதில் மேலும் மேலும் ஈரமாக்கியபடி இருந்தது. காலக்குளியலில் ஈரமான எதையும் நினைவின் துண்டால் துடைத்து உலர வைக்க  முடியுமா என்ன?

Sunday, April 7, 2013

35. Cassette கடை முதியவர்...

நம்மில் பலர் படித்து நல்ல வேலை, சம்பளம் என்று வாழ்க்கையில் ஆகியிருக்கலாம். அந்த நினைப்பின் மூலம் நம்மில் பலருக்கு ஒரு கர்வமும் இருக்கலாம். ஆனால், காலம் வீசிய வாய்ப்புகளின் பகடையில் நம் பக்கம் விழுந்த சாதகமான தாயம் இது என்றும் அந்த வாய்ப்புகள் கிடைக்காததன் விளைவாக பலர் எங்கெங்கோ தேங்கி விட்டார்கள் என்பதை நாம் சமூகத்தின் சாளரங்கள் வழியே பார்த்துப் புரிந்து கொள்ள நேர்கையில், கர்வம் காணாமல் போய், ஒரு வித பக்குவத்தை நம் மனது அடையக்கூடும்...

நம் கேசட் கடை பெரியவர் அத்தகைய ஒரு தெளிவையும் அதே சமயம் விடை காண இயலாத கேள்வியையும் ஒருசேர கொடுத்த நிகழ்வு ஒன்று இன்றும் மனதில் ஓடிக்கொண்டே இருக்கிறது. கணிப்பொறி என்பது ஒரு மந்திர இயந்திரம் என்பது போல நம் போன்ற சராசரி மனிதர்களின் கைகளுக்கு எட்டாமல் இருந்த நாட்கள் அவை. ஏதேனும் செய்திகளில் தட்டுப்படுமே அன்றி, அதைப் பற்றி வேறெதுவும் நாம் அறிந்திராத காலம்.

பெரிய சைஸ் திருமண ஆல்பம் மூன்று நான்கை சேர்த்து தைத்தால் போன்ற அளவில் இருக்கும் "பாடல்கள் புத்தகம்" 5 நம் முதியவரிடம் இருந்தது. அதை நம் மடியில் வைத்தோ கையில் பிடித்தோ பார்க்க இயலாது. கையும் தொடையும் வலிக்கத் துவங்கி விடும். அத்தகைய தடிமனான புத்தகங்களில் ஒரு அதிசயத்தை நிகழ்த்தியிருந்தார் அவர்.


இந்த பெரிய சைஸ் புத்தகங்களில், நம் தேடுதலை சுலபப்படுத்த, குறிப்பு புத்தகம் ஒன்றையும் வைத்திருந்தார். இதில், பாடகர்கள், இசையமைப்பாளர்களுக்கு ஒரு குறியீடு இருக்கும். உதாரணமாக,  என்றால் இளையராஜா, என்றால் ஜெயச்சந்திரன். இந்த குறியீடுகளைக் கொண்டே மற்ற புத்தகங்களில் பாடல்கள் வரிசைப்படுத்தப்பட்டிருக்கும். இந்த குறியீடுகள் புத்தகங்களின் எந்தெந்த பக்கங்களில் வருகின்றன என்பது குறிப்புப் புத்தகத்தில் இருக்கும். இரண்டு பாடகர்கள் சேர்ந்து பாடிய பாடல் என்றால் அது இரண்டு குறியீடுகளில் வரும். இது ஒருவகை குறியீடுத் தொகுப்பு.

இன்னொன்றில் பாடலின் படமும் வருடமும் மற்றொரு குறியீட்டில் இருக்கும். இந்த இரண்டு குறியீடு வகைகளையும் இணைக்கும் வகையில் இன்னொரு நம்பர் குறியீடு இருக்கும். இந்த நம்பர் குறியீடு அனைத்து குறிப்பு வகைகளிலும் இருக்கும். இந்த நம்பரின் மூலம், ஒரு பாடல் சம்பந்தப்பட்ட ஒரே ஒரு தகவல் இருந்தால் போதும். அந்தப் பாடலின் அனைத்து தகவல்களையும் நீங்கள் பத்து நிமிடங்களில் புரட்டி எடுத்து விடலாம்...

இதிலென்ன அதிசயம் என்கிறீர்களா? இவர் இதை வெறும் புத்தகத்தில் செய்தது, கணிப்பொறி, கண்ணுக்கும் கருத்துக்கும் எட்டாமல் இருந்த காலங்களில்.

நான் கல்லூரியில் கணிப்பொறி படிக்கத் துவங்கியவுடன் பொறி தட்டியது... தரவுத்தளம் (Relational Database) என்பதன் அடிப்படை கோட்பாடுகளை அசாத்தியமாக அவர் அந்தப் புத்தகங்களின் ஆக்கத்தில் கையாண்டிருந்ததைக் கண்டு அசந்து போனேன் நான். குளுகுளு அறையில் "Primary key" "Foreign key" என்று புழங்கும் சொற்களை, அதன் பெயர் மட்டுமே அறியாமல், அதை ஒத்த அறிவை, தனது அனுபத்திற்கும் தேவைக்கும் ஏற்றவாறு உருவாக்கிய, ஐந்தாம் வகுப்பு மேல் பள்ளி செல்லாத முதியவர் நமக்கு விட்டுப் போன செய்தி என்ன...?

காலத்தின் வீச்சில் கணக்கற்றுச் சிதறிக் கிடக்கும் எண்ணற்ற கோடி மனிதர்களில், மேலும் மேலும் பலர் வளர்ந்து கொண்டே போவதும், என்ன திறமை இருக்கிறது என்று வெளியில் தெரியாமலேயே பலரின் வாழ்வு பொட்டல் வெளியில் கொதிக்கும் கோடையில் தகிக்கும் தார்ச்சாலையில் தெரியும் கானல் போலாவதும் ஏன்? விஞ்ஞானமும் மெஞ்ஞானமும் விளக்க முடியாத நிகழ்வுகளின் வழிகளை குறிக்க, மொழியின் துணை நாடி நாம் வைத்த சொல் தானே "விதி"!

Sunday, March 10, 2013

34. ஒரு பாடல் வரி...ஒரு சமூக நெறி...


ஒரு புதிய கண்டுபிடிப்பை சாதித்த‌ விஞ்ஞானியின் மகிழ்ச்சியுடன் இருந்தேன் நான்...இவ்வளவுக்கும், அரிதான பாடல்களை செய்து தரக்கூடிய ஒரு தரமான காசெட் கடையை கண்டறிந்தது மட்டுமே நான் செய்தது. மாதம் எப்போது பிறக்கும், அந்த மாதத்திற்கான "cassette பணம்" நாற்பது ரூபாய் அப்பா எப்போது தருவார் என்று காத்திருந்த நாட்கள் அவை.

நாற்பது ரூபாயில் ஒரு "60" காசெட் வாங்கி ரெகார்டு செய்து விடலாம். அதாவது, நாற்பது ரூபாயில், எத்தனை காசு கொடுத்தாலும் வாங்க முடியாத, நினைவாகிப் போன நிகழ்வுகளை மனக்கினற்றிலிருந்து மீண்டும் மீண்டும் ஒரு மணி நேரம் இறைத்துக் குளிக்க தோதான இசை வாளியை வாங்கி வரலாம்!

ஜெயச்சந்திரன் பாடல்கள் லிஸ்ட் மூலம் அறிமுகமான அந்த கேஸ்ட் கடை முதியவர், தான் செய்யும் வேலையைத் தாண்டி, அதை எத்தனை பொறுப்புடனும், அர்ப்பணிப்புடனும் நேசித்தார் என்பதை உணர்த்தும் வண்ணம் ஏராளமான அனுபவங்கள் கிடைத்தன.

நான் ஒரு முறை பதிவு செய்யக் கொடுத்த பாடல்களில் "பூ மலர்ந்திட நடமிடும் பொன் மயிலே" [டிக்...டிக்...டிக் / 1981 / Ilayaraja / Yesudas / Jency] இருந்தது. அப்பொழுது நான் பள்ளி இறுதி  வகுப்பில் இருந்தேன்.

மிருதங்கத்தில் மிதந்தபடி  மேற்கத்திய தளத்திற்கு தாவும் இடங்களுக்காகவும், பல வரிகளின் முடிவில் அந்த வரிக்கு மெருகூட்டும் வண்ணம் வரும் வயலினுக்காகவும், அந்த இரண்டாம் சரணத்திற்கு முன்னர் வரும் ஜென்ஸியின் humming முடிந்து, மற்ற அனைத்து இசைக் கருவிகளும் மௌனம் காக்க, தனியே இழைந்தோடும் வயலினுக்காகவும், பல்லவியில் வரும் "விழிகளால் இரவினை விடிய‌ விடு" என்னும் வரிக்காகவும் அந்தப் பாடலை record செய்யும் விருப்பம் ஏற்பட்டது.

இந்தப் பாடலின் முதல் சரணத்தில் ஒரு வரி வெட்டப்பட்டிருக்கும். அப்போது அந்த வரி பொது ஒலிபரப்பில் தடை செய்யப்பட்டிருந்தது. இருப்பினும் பல இடங்களில் இந்தப் பாடல், அந்த "வெட்டு" இல்லாமலலேயே ஒலித்துக் கொண்டிருந்தன.

பதிவு செய்யக் கொடுத்து சில தினங்கள் கழித்து, அவரின் கடைக்குச் சென்று ரெடியான காசெட் வாங்கிக் கொண்டு, அன்றிரவு வீட்டின் மொட்டை மாடியில் கேஸட்டை "சோதனை ஓட்டம்" விட்டேன். பாடலை நம் முதியவர் அந்த வரி நீக்கப்பட்ட வடிவத்தில்தான் பதிவு செய்திருந்தார். சட்டென்று அறுபட்டு ஒரு வரி தாண்டிப் போவதால், பாடலின் ஓட்டத்தை தடை செய்வது போல இருந்ததால், எனக்கு அது பிடிக்கவில்லை. மறு தினம் மாலை கேசட்டை எடுத்துக் கொண்டு அவரிடம் போனேன். "பல இடங்களில் இந்தப் பாடல் முழுதாக கிடைக்கிறதே...ஏன் நீங்கள் மட்டும் வெட்டுடன் பதிவு செய்திருக்கிறீர்கள்" என்று கேட்டேன். அவர், "இல்லை தம்பி. நான் அந்தப் பாடலை அந்த வடிவில்தான் record செய்து தரமுடியும்" என்று சொல்லி விட்டார்.

மூன்றாண்டுகள் கழித்து நான் இளங்கலை கணிதம் முடித்த பின், மேற்கொண்டு பம்பாய் செல்வது என்று வீட்டில் திட்டமிடப்பட்டது. நானும் ஊருக்குக் கிளம்பும் முன் சில காசெட்களை பதிவு செய்ய எண்ணி நமது கடைக்குச் சென்றேன். நான் பம்பாய் போவதாகவும் ஒரு வேளை அங்கேயே தங்கி விட வாய்ப்புண்டு எனவும் அவரிடம் சொன்னேன். "அந்த யேசுதாஸ் ஜென்ஸி காசெட்டை கொண்டு வாங்க" என்றார். அடுத்த நாள் அவரிடம் அதை கொடுத்த போது, "மற்ற காசெட்டுகள் வாங்க வரும்பொழுது இதையும் வாங்கிக்குங்க" என்று சொல்லி அதை வாங்கி வைத்துக் கொண்டார்.

அந்த வார இறுதியில் எனக்கு ஒரு வியப்பு காத்திருந்தது. எனது புது காஸெட்டுகளை சரியாக பதிவு செய்யப்பட்டிருக்கிறதா என்று போட்டுக் காட்டிய அவர், இறுதியில் "யேசுதாஸ் ஜென்ஸி" கேஸட்டை ஓட விட்டார். சரியாக "பூ மலர்ந்திட" முதல் சரணத்தில் நிறுத்தினார். அதில் வெட்டப்பட்ட வரி ஓடிக்கொண்டிருந்தது. அந்தப் பாடலை மட்டும் அழித்து, மறுபடியும் பதிவு செய்து தந்திருக்கிறார் அவர்.

"தம்பி, இப்போ வளர்ந்து பெரியவானாயிட்டீங்க...இனிமே நீங்க இந்தப் பாட்டை முழுசாவே கேட்கலாம் அதான் உங்கள அந்த cassetteடை கொண்டு வரச் சொன்னேன். பாட்டை முழுசா மறுபடி record செஞ்சுருக்கேன்...ஆனா இந்த ஒரு வரி அழகான‌ பாட்டையே எவ்வளவு அசிங்கமாக்கிடுச்சு பாத்தீங்களா" என்றார். எத்தகைய சமூக பொறுப்புணர்வுமிக்கவராக இருந்தால், தான் செய்வது வியாபாரம் என்று தெரிந்தும், இது போன்ற "கொள்கைகள்" வாடிக்கையாளர்களை இழக்கக் கூட வைக்கும் என்று புரிந்தும், இத்தகைய "தரம்" பற்றிய அக்கறையுடன் செயல்பட முடியும்!

இப்பொழுது சேனலுக்கு சேனல், "ஜூனியர்" பெயரில் "சீஸன்" "சீஸனாய்" சீரழிந்து கொண்டிருக்கிறோமே...அங்கு அர்த்தம் விளங்காமல், தரக்குறைவான பாடல்களை சிறுவர் சிறுமியர் பாடும்பொழுது, "எத்தனை அனுபவித்து பாடுகிறாய்" என்றும் "expression போதாது" என்றும் நடுவர்கள் கூறும் பொழுது...இசை மேதாவிகளாக தங்களை கருதிக் கொள்ளும் இந்த நடுவர்களுக்கு சற்றேனும் பொறுப்பு இருந்தால், எவரேனும் தரம் குறைந்த வரிகள் உள்ள‌ பாடலை பாடத்துவங்குகையிலேயே "சபையில் இந்தப் பாடல் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது" என்று சொல்லும் துணிவு இருந்திருக்குமே...ஒரு வேளை நடுவர் வாய்ப்பும் டிவி தரும் விளம்பரமும் போய் விடும் என்ற பயமோ?

"பூ மலர்ந்திட" பாடலை சமீபத்தில் ஒரு பத்து வயது சிறுமி ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பாடினான். கேஸட் கடை முதியவர் "இந்தப் பாடலை இந்த வடிவத்தில்தான் என்னால் பதிவு செய்ய முடியும்" என்று இருபது வருடங்களுக்கு முன் சொன்னது காதருகில் கேட்டது...

Sunday, February 10, 2013

33. இளையராஜாவின் இயற்பியல் பகுதி 20


ஒரு பாடல் நம்மை எங்கெல்லாம் அழைத்துச் செல்லும்? அல்லது ஒரு பாடலால் என்னதான் செய்ய முடியும்? நிச்சயமாக, ஒரு வாழ்க்கைக்கு தேவையான, ஒரு வாழ்க்கை முழுவதும் நினைத்து நினைத்து பார்க்கக் கூடிய அனுபவங்களைத் ஒரு பாடலால் தர இயலும்.. காலத்தின் பாதைகளுக்குள்  அது நம்மை கூட்டிப் போகும். அது எப்பொழுது எங்கு நிகழும் என்று நம்மால் சொல்ல முடியாது.

பள்ளியிலிருந்து வீடு திரும்பிக் கொண்டிருந்த ஒரு மாலை வேளையில், பெரியார் பேருந்து நிலையம் அருகே "வானுயர்ந்த சோலையிலே" வந்து கொண்டிருந்தது. "இதய கோயில்" வெளியாகி ஒன்றிரண்டு வருடங்கள் ஆகியிருக்கக் கூடும். எனவே "வானுயர்ந்த சோலையிலே" என்றால் இதய கோயில் என்று தமிழ் நாட்டில் பெரும்பாலானோர் அறிந்திருந்த நேரம். ஆனால் இதில் விசித்திரம் என்னவென்றால், அந்த மாலை வேளையில் இந்தப் பாடலை SPBக்கு பதிலாக ஜெயச்சந்திரன் பாடிக்கொண்டிருந்தார். மெட்டும் வேறு.

பல்லவி மட்டுமே ஜெயச்சந்திரன் பாடியதிலும் SPB பாடியதிலும் ஒரே வார்த்தைகளைக் கொண்டதாக இருக்கும். சரணங்களின் வரிகள் வெவ்வேறு.
சட்டென்று மனதில் பதிந்து போனது ஜெயச்சந்திரன் பாடல். சில வாரங்கள் கழித்து, எனது அடுத்த cassette record செய்வதற்காக "shopping complex"ல் உள்ள‌ தேவி மியூசிக்கல்ஸ் சென்றிருந்தேன். அங்கிருந்தவரிடம் இதய கோயில் படத்தில் ஜெயச்சந்திரன் பாடிய "வானுயர்ந்த சோலையிலே" இருக்கிறதா என்று கேட்டேன். அவரோ, "அது SPB பாடியது" என்றார். நான், "இல்லை. ஜெயச்சந்திரனும் வானுயர்ந்த சோலையிலே பாடியிருக்கிறார்" என்று அந்த மெட்டில் பாடிக் காட்ட, என்னை "ஒரு மாதிரியாக" பார்த்து, "இப்படியொரு பாட்டே கிடையாது" என்றார்.

இடையில் ஓடிய சில வருடங்களில் ஜெயச்சந்திரன் பாடிய வானுயர்ந்த சோலையிலே கேட்கும் வாய்ப்பு மறுபடி கிட்டவேயில்லை. இருப்பினும், கடற்கரையில் நடக்கையில் விரல்களுக்கிடையில் சிக்கிக் கொண்ட மணல் துகள் வீட்டுக்கு வந்த பின்னும் எங்கேயோ ஒட்டியிருப்பதைப் போல, இந்தப் பாடலும் என்னுடன் வந்து கொண்டேயிருந்தது.

அன்றெல்லாம்  பாட்டு கேசட் ரெகார்டு செய்யும் கடைகளில் பெரும்பாலானவை நம்மிடம் list வாங்கி வைத்துக் கொண்டு அவற்றை மொத்தமாக "record room" அனுப்பி record செய்து வாங்கி நம்மிடம் தரும். இந்த வகை கடைகளில், அரிதான பாடல்கள் பலவற்றை "இல்லை" என்று சொல்லி விடுவார்கள். கடைகளில் "collections" என்ற பெயரில் முன்னதாகவே பதிவு செய்யப்பட்டு விற்பனை செய்யும் வகை கேசட்கள் எனக்கு சுத்தமாக ஒத்து வராது. ரசனையில் நெய்யப்பட்டு நினைவில் சேமிக்கப்பட வேண்டிய‌ இசையின் உணர்வுகளை பல சமயம் அது அறுத்தெரியும். உதாரணமாக, "சின்ன புறா ஒன்று" என்று உருகும் SPB உடனே "ஆத்தா ஆத்தோரமா வாரியா" என்று கேட்பார். அல்லது "திருப்பாற் கடலில் பள்ளி கொண்டாயே" என்று நாராயணனிடம் நற்கதி தேடும் யேசுதாஸ் அந்தர் பல்டி அடித்து அடுத்த பாடலிலேயே "வச்ச பார்வை தீராதடி" என்பார். எனவே நான் இத்தகைய, ஏற்கெனவே பதிவு செய்யப்பட்டு விற்கப்படும் கேசட்டுகளை ஒதுக்கியே வந்தேன்.

அரிதான பாடல்களை பதிய முடியாமல், பல கடைகள் ஏறி இறங்கிக் கொண்டிருந்த எனக்கு 1991ல் அந்த அதிர்ஷ்டம் கிட்டியது. இன்று போத்தீஸ் இருக்கும் தெருவில், அதற்கு எதிரே குறுகிய சந்துக்குள் ஒரு "recording room" இருப்பதை கண்டுபிடிக்க நேர்ந்தது. அங்கு நான் முதன்முதலாக ஒரு ஜெயச்சந்திரன் list வைத்துக் கொண்டுதான் சென்றேன். "தங்க ரங்கன்", "நெஞ்சிலாடும் பூ ஒன்று", "முடிவில்லா ஆரம்பம்", "வட்டத்துக்குள் சதுரம்", "மலர்களே மலருங்கள்", "நல்லதொரு குடும்பம்" என்று நிறைய கடைகள் இல்லையென்று கைவிரித்த விசித்திரமான பெயர்கள் கொண்ட படங்களில் இடம்பெற்ற ஜெயச்சந்திரன் பாடிய பாடல்கள் கொண்ட list அது.

கடையினுள் வெள்ளை வேட்டி சட்டையுடன் ஒரு முதியவர் இருந்தார். சிவகவி படத்திலிருந்து MKT பாட்டு ஒன்று சத்தமாக ஓடிக்கொண்டிருந்தது. தனது கெட்டியான நீள்சதுர வடிவ கறுப்பு நிறக் கண்ணாடியை சரிசெய்தபடி எனது லிஸ்டை பார்த்தார். எனது ஜெயச்சந்திரன் பாட்டுப் பட்டியலில் "பொன்னென்ன பூவென்ன கண்ணே உன் கண்ணாடி உள்ளத்தின் முன்னே; ஒரு கல்யாணப் பெண்ணாக உன்னைப் புவி காணாமல் போகாது பெண்ணே..." (அலைகள், MSV, 1973) பாடலின் வரியை மட்டும் எழுதியிருந்தேன். என்ன படம் என்று தெரியவில்லை. வரிசையாக வாசித்து வந்த அவர், இந்தப் பாடல் வரி வந்தவுடன், சட்டென்று "அலைகள்" என்று சொல்லிக் கொண்டே எழுதினார். இதுதான் ஜெயச்சந்திரனின் முதல் தமிழ் பாடல் என்றும் சொல்லி வியக்க வைத்தார்.

இவரிடம் ஜெயச்சந்திரன் பாடிய "வானுயர்ந்த சோலையிலே" பற்றி கேட்கலாம் என்று தோன்றியதால் கேட்டேன். சிறிதும் தாமதமின்றி அது "நூலறுந்த பட்டம்" (1979) என்ற படம் என்றார். மேலும், அதற்கு இசை இளையராஜா இல்லை. ஸ்டாலின் வரதராஜன் என்பவர் இசையமைத்த பாட்டு. பிறகு "இதய கோயில்" படத்தில் இளையராஜாவால் இன்னும் மெருகேற்றப்பட்டது என்றார். நான் அவரை ஒருவித பிரமிப்புடன் பார்த்துக் கொண்டிருந்தேன். எனக்கும் அவருக்கும் பதினைந்து வருட கால‌ தொடர்பை அந்தப் பாடல் ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறது என்பதை அப்போது நான் அறிந்திருக்கவில்லை...

தொடர்வோம்...

Sunday, January 27, 2013

32. இளையராஜாவின் இயற்பியல் பகுதி 19


நாம், சமூகத்துடன் நேரடி தொடர்பில் இறங்குவது பெரும்பாலும் கல்லூரியில் கால் வைக்கும் பொழுது துவங்குகிறது. இதன் ஒரு வடிவம், NCC, NSS போன்ற அமைப்புகளில் சேர்ந்து "நாட்டு நலப் பணி"களில் ஈடுபடுவது. நம்மில் பெரும்பாலானோர் நம் கல்லூரி நாட்களில் இதில் பங்கு பெற்றிருப்போம்..

எனது "இளங்கலை" பருவத்தில் NSS சார்பாக நாங்கள் traffic ஒழுங்குபடுத்தும் பணியில் சில பொழுது பணியாற்றியிருக்கிறோம். அத்தகைய ஒரு தினத்தின் மாலைப் பொழுதில், நெரிசல் மிகுந்த திண்டுக்கல் ரோடு சந்திப்பில் நாங்கள் நிறுத்தப் பட்டிருந்தோம். பழைய ஆரிய பவன் ஒரு முனையுமாய், முருகன் கோயில் மறு முனையுமாய் இருக்கும் அந்த நான்கு ரோடு சந்திப்பில், பக்கத்துக்கு நால்வர் வீதம் கைகளை இணைத்தபடி குறுக்கே நின்றால்  red signal ஒதுங்கினால் green! ஒருபக்கக் குழு ஒதுங்கி "green" செய்யும் பொழுது ஒரு விசில் தர வேண்டும். மறுபக்க குழு உடனே மறு விசில் கொடுத்து கைகளை கோர்த்தபடி மறித்து "red" செய்ய வேண்டும். இவ்வாறு நான்கு குழுக்களின் ஒருங்கிணைப்புடன், ஒவ்வொரு பக்கத்து சாலையிலும் போக்குவரத்து நின்று செல்லும்.

சாலை ஒழுக்கம் என்றால் கிலோ என்ன விலை என்று கேட்கும் மதுரை மகாஜனம் "இது என்னடா புதுக் கூத்து" என்று எங்களை வினோதமாக பார்த்தபடி கைத்தடுப்புகளை மீறப் பார்க்கும்.  இந்த சந்திப்புக்கு அருகில் ஒரு சிறிய அம்மன் கோயில் சாலை நடைபாதையில் அந்நாளில் இருந்தது. அங்கு "கூழ்" ஊற்றும் திருவிழா. அப்புறம் என்ன, அங்கு இளையராஜா, ஒலிப்பெருக்கியின் வழியே மனதை நிரப்பும் இசையின் கூழை எடுத்து நமக்குள் ஊற்றுவார் என்பதை தனியே சொல்லவும் வேண்டுமா?

நாங்கள் பாடல்களை கேட்டவாறே எங்கள் வேலையை செய்து வந்தோம். அப்பொழுது "தங்க நிலவுக்குள்" (ரிக்க்ஷா மாமா / 1992 / Ilayaraja / SPB) பாடல் வந்தது.

இந்தப் பாடலில் சில அற்புதங்கள் ஒளிந்து கொண்டிருக்கின்றன. அதை தேடியெடுக்க, இளையராஜா செதுக்கியிருக்கும் வெவ்வேறு ஒலித்தளங்களின் தோட்டத்தில் நாம் நடக்க வேண்டும். அடித்தளத்தில் கிடார் மற்றும் தபேலாவின் கைப்பிடியை பிடித்துக் கொள்ள வேண்டும். பிறகு வயலின் மற்றும் புல்லாங்குழலின் படிகளில் ஏறிய பின், லயங்களின் லாவகத்துடன் ஒரு ஊஞ்சல், நாம் அமர்ந்தாட அமைக்கப்பட்டிருக்கிறது என்பது நமக்கு புரிய வரும்.

இதை எப்படிச் செய்திருக்கிறார் இளையராஜா? சில வரிகளைத் தவிர அனைத்து வரிகளின் முடிவிலும் வரும் புல்லாங்குழல் எப்படியிருக்கிறது? ஊஞ்சலில் நாம் உயரே செல்லும் பொழுது காதின் பின்புறத்தில் ஒரு காற்று வருடிச் செல்லும்...அனுபவத்திருக்கிறீர்களா? அதைப் போன்றது இந்த வரிகளின் பின்வரும் குழலின் வருடல். அந்த உச்சியில் ஒரு நொடி நின்று, மீண்டும் கீழிறங்கி, கால்கள் தரையைத் தொட்டு, ஒரு விசை உருவாகி மறு உச்சிக்கு போவோம்...அந்த உச்சிகளில் ஏற்படும் வருடல்களை ஆணியடித்து நிறுத்த முயல்வது போல சீரான இடைவெளியில் வரும் இரண்டு கப்பாஸ்... இந்த ஊஞ்சல் வீச்சில் தரைதொடும் நடுப்பொழுதை, காலக் கட்டுக்குள் கொண்டு வருவது போலவே, இரண்டு கப்பாஸ் நடுவே ஒலிக்கும் அந்த ஒற்றை மணியோசை...

இந்த பாடலின் வசீகரம் பற்றி பேசிக் கொண்டிருந்த அந்த ஒரு நிமிட மயக்கத்தில் எதிர் சாலையில் விசில் ஊதியது எங்கள் காதில் ஏறவில்லை. ஏறியிருக்கும் என்று எதிர்பார்ப்பது நியாயம் என்று அப்போது எங்களுக்குத் தோன்றவும் இல்லை. பதில் விசில் ஊதி, கைகளை கோர்த்து உடனடி தடுப்பு ஏற்படுத்த வேண்டிய நாங்கள், இசை அடுப்பை ஊதிக் கொண்டிருந்ததால் ஏற்பட்ட நிமிடத்துக் குழப்பத்தில், பெருநெரிசல் ஏற்பட்டு அந்த குறுகிய சாலைகளின் சந்திப்பு குழப்பமாகிப் போனது... "college பசங்க கிட்ட பொறுப்பான வேலைய‌ கொடுத்தா இப்படித்தான் ஆகும்" என்று சொல்லியபடி எங்களை கடந்து போனார் ஒருவர்.

இப்பொழுது அதே இடத்தில் "automatic signal" வந்து விட்டது. இன்றும் அந்த இடத்தைக் கடக்கும் பொழுதெல்லாம், அத்தனை நெரிசலிலும், இரைச்சலுடன் கடக்கும் வாகனங்களுக்கு இடையிலும், அனைத்து சத்தமும் மறைந்து போய், அந்த வரிகளுக்கு முடிவில் வரும் புல்லாங்குழல் எங்கிருந்தோ என் காது மடலை தொடுவது போன்ற ஒரு உணர்வு.

நாம் கடக்கும் சாலைகள் அனைத்துமே காலத்தின் பாதைகள் தானே?

Friday, January 11, 2013

31. இளையராஜாவின் இயற்பியல் பகுதி 18


நாம் பயணம் போகும் பொழுது எடுக்கும் பேருந்து பயணச்சீட்டுக்களை என்ன செய்வோம்? இறங்கியவுடன் கசக்கி எறிவோம். பக்கத்தில் இருக்கும் குப்பைத் தொட்டியில் போடும் பழக்கம் கூட நமக்குக் கிடையாது. ஆனால் என்னிடம் ஒரு "40 பைசா" டிக்கெட் இருபத்தைந்து வருடங்களுக்கு மேலாக பத்திரமாக இருக்கிறது. ரோஜா நிறத்தில் இருக்கும் அதன் உள்ளே கால ரோஜாவின் வாசனையை ஒளித்து வைத்திருக்கிறேன்.

அன்று வழக்கம் போல் பழங்கானத்தம் petrol bunk அருகே பேருந்து நின்றது. அதற்கு சில நிமிடங்கள் முன்னர் கூட்ட நெரிசலில் நான் "pass" எடுக்க எத்தனிப்பதை கவனித்த நடத்துனர் என்னை "வைத்துக் கொள்" என்று சைகை செய்து போய் விட்டார். பஸ் நின்ற இடத்தில் இரண்டு checkerக‌ள் நின்று கொண்டிருந்தனர்.டிக்கெட் எடுக்காததற்காக நான்கைந்து பேர்கள் சற்று தள்ளி நிறுத்தி வைக்கப்பட்டிருந்தனர். அவர்களை பார்த்தவாறே படிக்கட்டில் இறங்கிய என்னை கீழே இருந்த checker நிறுத்தினார்.

நான் பழக்கமான உச்சரிப்பில் "pass" என்றேன். "எடு" என்றார் . பையின் பல இடங்களில் தேடியும் பாஸ் பிடிபடாததால் மெய்யில் ஒரு கலக்கம் தோன்றியது. "வீட்டுல மறந்து வச்சிட்டேன் சார்..." என்ற என் இழுவை முடியும் முன் என்னை அந்த வரிசையில் ஒதுக்கி நிற்க வைத்தார்.

வரிசையாக நின்றிருந்த பஸ்களின் உள்ளிருந்தவர்களும் நடந்து போகின்றவர்களும் பள்ளிச் சீருடையில் இருக்கும் என்னையே பார்ப்பது போல் அவமானம் பிடுங்க, என் காதுகள் சாலையின் எதிர்புறம் இருந்த டீ கடையின் ஒலிப்பெருக்கி நோக்கி ஓடியது...அது காலையில் "ஒருபடப் பாடல்கள்" வரும் நேரம். "கவிக்குயில்" [1977/ Ilayaraja] கூவிக் கொண்டிருந்தது.

எனது பேருந்தின் conductor, பெரியார் நிலையம் - திருப்பரங்குன்றம் வழித்தடத்தில் பயணம் செய்பவர்களுக்கு பரிச்சயமான முகமாக இருக்கலாம். நெற்றியில் சிறிய குங்குமப் பொட்டுடனும், அதிகளவு எண்ணெய் தடவப்பட்டு படிய வைக்கப்பட்ட தலையுடனும், சட்டையின் கையிடுக்குப் பகுதிகளில் பஸ் புழுக்கத்தின் வியர்வை, அதன் உப்பு மூலம் அடையாளம் வரைய, வலம் வரும் பொறுமைமிக்க மனிதர்.

ராதையை பூங்கோதையை கண்ணன் அழைப்பதாக என் காதை அடைந்த பாடலுக்கிடையில், தனது stage collection வெள்ளைப் பேப்பரை செக்கரிடம் கொடுத்து சரி பார்த்த conductor என்னைப் பார்த்தபடி, "தம்பி பாஸ் மறந்துருச்சு... நான் தான் முன்னாடி போயிட்டு வந்து ticket தாரேன்னு முன்னாடி போயிட்டேன்" என்று அந்த நாற்பது பைசா டிக்கெட்டை என் கையில் திணித்தார். நான் என்ன செய்வதென்று தெரியாமல் திருதிருவென விழிக்க, "கிளம்பு கிளம்பு" என்றார். அவர் என்னையும் என் மறதியையும் காப்பாற்றியிருக்கிறார் என்று புரிய சில நிமிடங்கள் ஆனது.

நமக்கு சற்றும் சம்பந்தமில்லா மனிதருக்கும் உதவிட முடியும் என்று அடிமனதில் ஆணி அடித்துப் போனார் அந்த பேருந்து நடத்துனர். மெதுவாக நடந்து சற்று தூரம் கடந்து நான் திரும்பி பார்க்கையில் ஒரு பத்து பேராவது டிக்கெட் இல்லாமல் வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தனர். தான் கண்ட காதல் ஓவியம், கனவோ நினைவோ என்று சாலையில் போய் வருவோரிடம் கேட்டுக்கொண்டிருந்தார் சுஜாதா

இவை நடந்த சுமார் பத்து நிமிட இடைவெளியில், "காதல் ஓவியம் கண்டேன்" மற்றும் "குயிலே கவிக்குயிலே" கடந்து போனதை அவ்வப்பொழுது நான் என்னையறியாமலே கவனித்து கொண்டிருந்திருக்கிறேன் என்பது, பின்னாளில் இந்தப் பாடல்களை கேட்கும் பொழுதெல்லாம், அந்த பத்து நிமிடங்கள், பளிங்கில் வரையப்பட்ட கருநிற ஓவியம் போல் துல்லியமாக நினைவில் மீண்டு வருவதன் மூலம் ஒரு வித பரவசம் கொடுக்கிறது.

"சின்னக் கண்ணன் அழைக்கிறான்" பாடலில் சில சிறப்புகள் உண்டு. தபேலாவில் தவழும் விரல்கள் விடுபடும் இடைவெளிகளை, கிடாரால் கோர்த்து ஒரே சரமாக கொண்டு செல்வார் இளையராஜா. பிற்பாடு ஆயிரக்கணக்கான பாடல்களில் அவர் இதைச் செய்திருந்தாலும், இந்த உத்தியின் மூலம் நம் மனதின் ரசனைக்கு உற்சாகமூட்ட‌ அவர் முயன்ற ஆரம்ப கட்ட நாட்களில், வெளிவந்த முக்கியமான பாடல்களில் இதுவும் ஒன்று.

பொதுவாக புல்லாங்குழல், வயலின், வீணை போன்றவற்றை ஒன்றுடன் மற்றொன்று ஒத்து, பின் தொடர்ந்து வருமாறு வைப்பது தான் இளையராஜா வழக்கம். இந்தப் பாடலின் இரண்டு சரணங்களுக்கு முன்னரும் ஒரு புல்லாங்குழல் மற்றொரு புல்லாங்குழலையே தொடர்வது நமக்கு வித்தியாசமான உணர்வு தரும் - ஒரு பாம்பின் மேல் மற்றொரு பாம்பு ஊர்வதை பார்ப்பது போல....

ஒவ்வொரு சரணமும் முடிந்து மீண்டும் பல்லவிக்குள் நுழைகையில் கிடார் "கண்ணன் அழைக்கிறான்" என்ற வார்த்தைக்குள்ளேயே ஒரு சுற்று சுற்றி அடங்கும்.

இதே படத்தில் வரும் "கவியே கவிக்குயிலே" பாடலின் tabla-guitar combination,அது வரை நாம் கேட்டிராத ஒரு கெட்டித்தன்மையுடன் இருக்கும். இதில் தபேலாவின் ஆழத்தையும் கிடாரின் ஆழத்தையும் எந்த விகிதத்தில் கலக்க வேண்டும் என்று இளையராஜாவுக்கு எப்படித் தோன்றியதோ...ஆனால் அந்த விகிதம் இதுவரை வேறு எந்தப் பாடலிலும் அவர் பயன்படுத்தவில்லை.


அன்று duty முடிகையில் அவருக்கு நாற்பது பைசா இடித்திருக்கும். அந்த நாட்களில் நாற்பது பைசா என்பதற்கு மதிப்பு இருந்தது. ஆனாலும் அடுத்த நாள் அவரிடம் நாற்பது பைசாவை திருப்பிக் கொடுக்கையில் அவர் வாங்கவில்லை!

ஒரு வருடத்திற்கு முன் திருப்பரங்குன்றம் செல்லும் பேருந்தில் இவரை பார்க்க நேர்ந்தது. நன்றாக நரையேறிய தலையுடன், அதே குங்குமப் பொட்டுடன், அதே வழித்தடத்தில் அவர் இருக்கிறார். முன்னர் விரல்களுக்கிடையில் ரூபாய் நோட்டுக்களையும், விதவிதமான நிறத்தில் பயணச்சீட்டுகளையும் வைத்திருந்த இவரிடம் இப்போது பயணச்சீட்டு இயந்திரம் இருக்கிறது. பொத்தானை அழுத்த, எட்டு ரூபாய் என்று அச்சடிக்கப்பட்டு ஒரு வெள்ளை காகிதம் வெளிவர, கிழித்துக் கொடுத்தார் அவர். அதை வாங்கும் பொழுது, அந்த பயணச்சீட்டு மிகவும் கனமாகத் தோன்றியது. கால எடை! காலத்தின் கனத்தை எப்படி அளப்பது? வருடங்களைக் கொண்டு நாம் அளக்கலாம். நம் வாழ்க்கையைக் கொண்டு காலம் அளக்குமோ?