Sunday, February 10, 2013

33. இளையராஜாவின் இயற்பியல் பகுதி 20


ஒரு பாடல் நம்மை எங்கெல்லாம் அழைத்துச் செல்லும்? அல்லது ஒரு பாடலால் என்னதான் செய்ய முடியும்? நிச்சயமாக, ஒரு வாழ்க்கைக்கு தேவையான, ஒரு வாழ்க்கை முழுவதும் நினைத்து நினைத்து பார்க்கக் கூடிய அனுபவங்களைத் ஒரு பாடலால் தர இயலும்.. காலத்தின் பாதைகளுக்குள்  அது நம்மை கூட்டிப் போகும். அது எப்பொழுது எங்கு நிகழும் என்று நம்மால் சொல்ல முடியாது.

பள்ளியிலிருந்து வீடு திரும்பிக் கொண்டிருந்த ஒரு மாலை வேளையில், பெரியார் பேருந்து நிலையம் அருகே "வானுயர்ந்த சோலையிலே" வந்து கொண்டிருந்தது. "இதய கோயில்" வெளியாகி ஒன்றிரண்டு வருடங்கள் ஆகியிருக்கக் கூடும். எனவே "வானுயர்ந்த சோலையிலே" என்றால் இதய கோயில் என்று தமிழ் நாட்டில் பெரும்பாலானோர் அறிந்திருந்த நேரம். ஆனால் இதில் விசித்திரம் என்னவென்றால், அந்த மாலை வேளையில் இந்தப் பாடலை SPBக்கு பதிலாக ஜெயச்சந்திரன் பாடிக்கொண்டிருந்தார். மெட்டும் வேறு.

பல்லவி மட்டுமே ஜெயச்சந்திரன் பாடியதிலும் SPB பாடியதிலும் ஒரே வார்த்தைகளைக் கொண்டதாக இருக்கும். சரணங்களின் வரிகள் வெவ்வேறு.
சட்டென்று மனதில் பதிந்து போனது ஜெயச்சந்திரன் பாடல். சில வாரங்கள் கழித்து, எனது அடுத்த cassette record செய்வதற்காக "shopping complex"ல் உள்ள‌ தேவி மியூசிக்கல்ஸ் சென்றிருந்தேன். அங்கிருந்தவரிடம் இதய கோயில் படத்தில் ஜெயச்சந்திரன் பாடிய "வானுயர்ந்த சோலையிலே" இருக்கிறதா என்று கேட்டேன். அவரோ, "அது SPB பாடியது" என்றார். நான், "இல்லை. ஜெயச்சந்திரனும் வானுயர்ந்த சோலையிலே பாடியிருக்கிறார்" என்று அந்த மெட்டில் பாடிக் காட்ட, என்னை "ஒரு மாதிரியாக" பார்த்து, "இப்படியொரு பாட்டே கிடையாது" என்றார்.

இடையில் ஓடிய சில வருடங்களில் ஜெயச்சந்திரன் பாடிய வானுயர்ந்த சோலையிலே கேட்கும் வாய்ப்பு மறுபடி கிட்டவேயில்லை. இருப்பினும், கடற்கரையில் நடக்கையில் விரல்களுக்கிடையில் சிக்கிக் கொண்ட மணல் துகள் வீட்டுக்கு வந்த பின்னும் எங்கேயோ ஒட்டியிருப்பதைப் போல, இந்தப் பாடலும் என்னுடன் வந்து கொண்டேயிருந்தது.

அன்றெல்லாம்  பாட்டு கேசட் ரெகார்டு செய்யும் கடைகளில் பெரும்பாலானவை நம்மிடம் list வாங்கி வைத்துக் கொண்டு அவற்றை மொத்தமாக "record room" அனுப்பி record செய்து வாங்கி நம்மிடம் தரும். இந்த வகை கடைகளில், அரிதான பாடல்கள் பலவற்றை "இல்லை" என்று சொல்லி விடுவார்கள். கடைகளில் "collections" என்ற பெயரில் முன்னதாகவே பதிவு செய்யப்பட்டு விற்பனை செய்யும் வகை கேசட்கள் எனக்கு சுத்தமாக ஒத்து வராது. ரசனையில் நெய்யப்பட்டு நினைவில் சேமிக்கப்பட வேண்டிய‌ இசையின் உணர்வுகளை பல சமயம் அது அறுத்தெரியும். உதாரணமாக, "சின்ன புறா ஒன்று" என்று உருகும் SPB உடனே "ஆத்தா ஆத்தோரமா வாரியா" என்று கேட்பார். அல்லது "திருப்பாற் கடலில் பள்ளி கொண்டாயே" என்று நாராயணனிடம் நற்கதி தேடும் யேசுதாஸ் அந்தர் பல்டி அடித்து அடுத்த பாடலிலேயே "வச்ச பார்வை தீராதடி" என்பார். எனவே நான் இத்தகைய, ஏற்கெனவே பதிவு செய்யப்பட்டு விற்கப்படும் கேசட்டுகளை ஒதுக்கியே வந்தேன்.

அரிதான பாடல்களை பதிய முடியாமல், பல கடைகள் ஏறி இறங்கிக் கொண்டிருந்த எனக்கு 1991ல் அந்த அதிர்ஷ்டம் கிட்டியது. இன்று போத்தீஸ் இருக்கும் தெருவில், அதற்கு எதிரே குறுகிய சந்துக்குள் ஒரு "recording room" இருப்பதை கண்டுபிடிக்க நேர்ந்தது. அங்கு நான் முதன்முதலாக ஒரு ஜெயச்சந்திரன் list வைத்துக் கொண்டுதான் சென்றேன். "தங்க ரங்கன்", "நெஞ்சிலாடும் பூ ஒன்று", "முடிவில்லா ஆரம்பம்", "வட்டத்துக்குள் சதுரம்", "மலர்களே மலருங்கள்", "நல்லதொரு குடும்பம்" என்று நிறைய கடைகள் இல்லையென்று கைவிரித்த விசித்திரமான பெயர்கள் கொண்ட படங்களில் இடம்பெற்ற ஜெயச்சந்திரன் பாடிய பாடல்கள் கொண்ட list அது.

கடையினுள் வெள்ளை வேட்டி சட்டையுடன் ஒரு முதியவர் இருந்தார். சிவகவி படத்திலிருந்து MKT பாட்டு ஒன்று சத்தமாக ஓடிக்கொண்டிருந்தது. தனது கெட்டியான நீள்சதுர வடிவ கறுப்பு நிறக் கண்ணாடியை சரிசெய்தபடி எனது லிஸ்டை பார்த்தார். எனது ஜெயச்சந்திரன் பாட்டுப் பட்டியலில் "பொன்னென்ன பூவென்ன கண்ணே உன் கண்ணாடி உள்ளத்தின் முன்னே; ஒரு கல்யாணப் பெண்ணாக உன்னைப் புவி காணாமல் போகாது பெண்ணே..." (அலைகள், MSV, 1973) பாடலின் வரியை மட்டும் எழுதியிருந்தேன். என்ன படம் என்று தெரியவில்லை. வரிசையாக வாசித்து வந்த அவர், இந்தப் பாடல் வரி வந்தவுடன், சட்டென்று "அலைகள்" என்று சொல்லிக் கொண்டே எழுதினார். இதுதான் ஜெயச்சந்திரனின் முதல் தமிழ் பாடல் என்றும் சொல்லி வியக்க வைத்தார்.

இவரிடம் ஜெயச்சந்திரன் பாடிய "வானுயர்ந்த சோலையிலே" பற்றி கேட்கலாம் என்று தோன்றியதால் கேட்டேன். சிறிதும் தாமதமின்றி அது "நூலறுந்த பட்டம்" (1979) என்ற படம் என்றார். மேலும், அதற்கு இசை இளையராஜா இல்லை. ஸ்டாலின் வரதராஜன் என்பவர் இசையமைத்த பாட்டு. பிறகு "இதய கோயில்" படத்தில் இளையராஜாவால் இன்னும் மெருகேற்றப்பட்டது என்றார். நான் அவரை ஒருவித பிரமிப்புடன் பார்த்துக் கொண்டிருந்தேன். எனக்கும் அவருக்கும் பதினைந்து வருட கால‌ தொடர்பை அந்தப் பாடல் ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறது என்பதை அப்போது நான் அறிந்திருக்கவில்லை...

தொடர்வோம்...

4 comments:

  1. ஆர்வத்துடன் படிக்க விரும்புகையில் சடாரென முடிந்துவிட்டது உங்கள் பதிவு. இன்னும் நிறைய நீங்கள் எழுத வேண்டும் என்று என் கோரிக்கையை வைக்கிறேன் அதுவும் இது போல பலருக்கு தெரியாத இசை மற்றும் பாடல்கள் பற்றி.

    ReplyDelete
  2. காரிகன்,
    நீங்கள் சொல்வது கேட்பது எதற்கும் குமரன் பதில் ஏதும் தரமாட்டார் என்று உங்களுக்குத் தெரியாதா ..? பாவம் நீங்கள் ... என் மாதிரி !

    ReplyDelete

  3. pls Upload நூலறுந்த பட்டம் song.i can't find the songs in web.

    ReplyDelete
  4. நல்ல அனுபவம்.

    ReplyDelete