Sunday, July 19, 2015

43. இளையராஜாவின் இயற்பியல் பகுதி 26

ஒரு பாடலை நாம் எப்போது முதலில் கேட்டோம் என்று நம்மை நாமே தோண்டிக் கொண்டே போனால்...அதாவது, மனதின் சுவரில் நினைவின் ஆணியை காலச் சுத்தியலால் அடித்து உள்ளிறக்கிக் கொண்டே போனால்...ஓரிடத்தில் மேற்கொண்டு நகராது நிற்கும் நொடியில் அதை கண்டுபிடிக்க முடியக்கூடும்!

அப்படித்தான், இளையநிலா உலவிய இரவுகள் வழியே வருடங்களை அடித்து இறக்கி ஆழ்மனதில் மீதமிருக்கும் பால்யத்தின் மிச்சங்களில் மிதக்கத் துவங்குகையில் தென்படத்துவங்குகிறது அப்பாடல் கேட்ட முதற் பொழுதுகள்...

மதுரை வரலாற்றில் 1813ல் இருந்து நீதிமன்றங்கள் நகரின் வெவ்வேறு இடங்களில் செயல்பட்டு வந்ததாக தகவல்கள் உண்டு. அதில் ஓரிடமான டி.எம் கோர்ட் இருந்த இடத்தில் தான் எங்கள் பள்ளிப் பேருந்து நின்று செல்லும். வரலாற்றில் நாம் இடம் பிடிக்கிறோமோ இல்லையோ, அதன் சுவடின் மேல் நிற்கும் போதே நமக்கு ஒருவித புல்லரிப்பு நிகழத்தான் செய்கிறது. பெரியாரிலிருந்து தெப்பக்குளம் செல்லும் சாலை வழியாக மேல மாசி வீதி திரும்புகையில் அம்மா என்னை அழைத்துச் செல்ல வந்திருக்கிறாரா என்று பேருந்தின் ஜன்னல்கள் வழியே எட்டிப்பார்க்கையில் அவர் அங்கு நில்லாத நாள் என்று ஏதேனும் இருந்திருக்கிறதா என்று, இன்று அவர் இல்லாத பொழுது மனது நெகிழ்கிறது. கரையான் தின்ற கறுப்பு வெள்ளை புகைப்படம் போல பழுப்பாக மனதில் மீதமிருக்கும் அந்த மாலை நேரக் காட்சியில் அம்மாவின் மெலிந்த உருவத்தின் பின்புலத்தில் மேலெழும்பி நிற்கும் சாரத்தில் நின்றிருக்கும் விளம்பரத் தட்டியில் தான் "பயணங்கள் முடிவதில்லை" என்பதை எழுத்துக் கூட்டிப் படிக்கத் துவங்கியிருந்தேன்.... 50, 100, 150, 200, 250, 300 என்று "நாட்கள்" மட்டும் மாறிக்கொண்டே இருக்க "பயணங்கள் முடிவதில்லை" மட்டும் அந்தத் தட்டியில் தொடர்ந்து பயணித்து வந்தது.

எண்ணற்ற ஞாபகங்களின் சினைமுட்டைகளை சிந்தனையில் உருவாக்க உதவிய இலங்கை வானொலி தான் இளையநிலாவை என்னுள் இறக்கியது. ஒரு ஞாயிறு மதியம் மனதில் சூல் கொண்ட முகிலினங்கள் என்னுடன் வயது தோறும் மழை பொழிந்தபடி வலம் வரும் என்று எதிர்பார்த்திருக்கவில்லை.அந்த வருடம் முழுவதும் விளம்பரத் தட்டியில் இருந்த இளையநிலா விதையை பார்வைத் தண்ணீரால் மட்டுமே பதியன் செய்து வந்த என் உள்ளத் தொட்டியில் கோடை விடுமுறைக்கு மெட்ராஸ் சென்ற பொழுது அந்த மறக்க முடியாத நாள் மொட்டு என் மாமாவின் தயவில் மலர்ந்தது. ஒரு வார இறுதியில் எங்கள் மாமா இருந்த தெருவே காலியாகி "பிளாஸா" தியேட்டரில் இடம் பெயர்ந்திருந்தது. சுமார் அறுபது டிக்கெட்டுக்களை மாமா கையால் எண்ணிய பொழுது நான் அவரின் சட்டை நுனியை பிடித்தவாறு நின்றிருந்தேன். இசையின் தரிசனம் புலன்களின் வழியே உள்ளிறங்கும் பொழுது ஏற்படும் உள்ளத்தின் பூரிப்பில் நீடிக்கும் நிச்சலமற்ற நிலையின் அனுபவிப்பின் ஆரம்பம் அன்று நிகழ்ந்தது. இலங்கை வானொலி அடைகாத்த முட்டைகள் உடைந்து உற்சாகத்தின் உயிர்ப்பு உருவமெடுத்து தியேட்டரின் இருபுற சுவர்களில் வரிசையாய் இருந்த பெரும் ஸ்பீக்கர்களின் வழியே ஆர்ப்பரித்து உலாவின...சில வரிகள் காலத்தின் பெருவெளியில் நீண்ட நாள் நீந்தும் என்பதை இப்படத்தின் இயக்குனரும் கேமிரா மேனும் உணர்ந்திருந்தார்கள் போலும். எனவே தான் "முகவரிகள் தவறியதால் அழுதிடுமோ அது மழையோ" இரண்டாம் முறை பாடப்படும் பொழுது உணர்வின் எழிலை உதடுகளின் உச்சரிப்பின் வழியே பெண்மை முன் வைப்பது போல் படமாக்கினரோ...

அந்த நாள் நகர்ந்த பிறகு செவிகள் பெறும் இன்பத்தில் விழிகளுக்கும் பங்கு தர சில ஆண்டுகள் காத்திருந்த பின், தூர்தர்ஷன் தயவில் வெள்ளிக்கிழமை இரவு செவிகளும் விழிகளும் அதனதன் பங்கை பிரித்துக் கொண்டன. அதொன்றும் அத்தனை எளிதாக இல்லை. பெரும்பாலும் பழைய பாடலை ஒளியும் ஒலியும் இறுதியில்தான் போடுவார்கள். முகிலனங்கள் அலைவதை மனம் பார்க்கத் தயாராகும் பொழுது "செய்திகள் தொடரும்" ஸ்லைடு போட்டு மழை பொழிய காத்திருந்த மனதின் மேகத்தை கலைத்து விடுவார்கள்.

 மேல்நிலை வகுப்புகளிலும் கல்லூரி காலத்திலும் தேர்வுகளின் முன்னிரவுகளிலும் தேர்வுக்கு கிளம்பும் பொழுதுகளிலும் இளைய நிலா இறை வணக்கமாய் டேப் ரெக்கார்டரின் வழியே பலம் ஊட்டியது. இறைவனை விட இளையநிலா மனதை "வழிப்படுத்தும்" என்ற நம்பிக்கை எனக்கு! பெரும்பாலும் தேர்வுக்கு கிளம்பும் நேரத்தில் அம்மா என் நெற்றியில் வைக்கும் விபூதியில் அவரது நம்பிக்கையும், பிண்ணனியில் ஓடிக்கொண்டிருக்கும் இளைய நிலாவில் எனது நம்பிக்கையும் நங்கூரம் இட்டிருந்தன. இப்பாடல் ஓட்டியே அறுந்து சிதைந்த கேசட்டுகளின் எண்ணிக்கை கனிசமாய் இருக்கும்.

மெயின் ரோட்டிலிருந்து இரண்டு கிலோ மீட்டர் உள்ளிருந்த கல்லூரிக்கு, குறிப்பிட்ட பேருந்தை தவற விட்டால் நடையே கதி. அப்போதெல்லாம் ஷாப்பிங் காம்ப்பெளக்ஸ் பக்கம் இருவழி போக்குவரத்து உண்டு.  பின்னர் தோன்றி இன்றிருக்கும் கே.பி.என் டிராவல்ஸ் எதிர்புறம் அன்று பஸ் ஸ்டாப் இருந்தது.அவ்வப்போது கல்லூரிப் பேருந்தா இல்லை இளைய நிலாவா என்று அந்த பஸ் ஸ்டாப்பில் என்னை கடவுள் பரிசோதித்து பார்ப்பதுண்டு . சளைக்காமல் நானும் இளைய நிலாவின் பக்கமே நிற்பேன். ஒரு முறை அப்பேருந்தின் வழக்கமான கண்டக்டர் "என்ன தம்பி காலேஜ் சேர்ந்தா பொண்ணுங்கள பார்க்கறதுக்கு நின்னுருவீங்களோ? காலேஜ் வரைக்கும் போற பஸ்ஸ விட்டுட்டு ஸ்டாப்ல சும்மா நின்னு பார்த்துகிட்டுருக்க‌..." என்று கேட்ட போது மனதுக்குள் சிரித்து கொண்டேன். சுட்டெரிக்கும் மதுரை வெயிலில் "வரும் வழியில் பனிமழை"யில் நனைந்து நின்றிருந்தேன் என்று அவரிடம் சொல்ல முடியுமா?சொன்னால்தான் புரியுமா?
 
பிறகு சாட்டிலைட் சேனல்கள் உதயமாயின. வீட்டின் எப்பகுதியில் நானிருந்தாலும் எந்த சேனலினிலேனும் இளையநிலா ஓடுவதை எதேச்சையாக அம்மா பார்க்க நேர்ந்தால் "உன் பாட்டு போடறாண்டா" என்று குரல் கொடுப்பார். பயணங்கள் முடிவதில்லை படம் போடப்படுகிறது என்று தெரிந்தால், படம் துவங்கி பத்தாவது நிமிடம் முடிகையில் எனக்கான தேநீர் காத்திருக்கிறது என்பதை அனுபவ வாயிலாக அறிந்து வைத்திருந்த நான், விளம்பர இடைவெளிகளை தோராயமாக கணக்கிட்டு அப்பாடலை மட்டும் பார்க்கும் வித்தை கற்றறிந்து களிப்படைந்த வருடங்கள்...நினைவின் பழுப்பேறிய வருடங்கள்...அம்மாவின் அழைப்புக் குரல் போல இப்பாடலும் இன்று வரை அலுக்கவேயில்லை - ‍இரண்டின் ஒலியலைகளும் நினைவின்அடுக்குக்களில் மட்டுமின்றி அதன் இடைவெளி இடுக்குகளிலும் எல்லாம் நுழைந்து அமர்ந்து விட்டதாலோ என்னவோ!


Sunday, May 17, 2015

42. இளையராஜாவின் இயற்பியல் பகுதி 25

1990களின் இறுதி...வேலைக்குச் சேர்ந்த புதிது...அதிக வேலைபளுவால் நீளும் அலுவலக இரவுகளை இலகுவாக்க அவ்வப்போது இளையராஜாவின் உதவியை நாடும் பழக்கம் எனக்கு உண்டு...அப்படித்தான் அன்றும், வெளியில் என்ன நடக்கிறது என்பதே தெரியாத குளிரூட்டப்பட்ட கூண்டுக்குள் நாளின் பெரும்பகுதியை கழிக்கும் என் போன்று மென்பொருள் இயந்திரங்களில் செயலற்று போயிருந்த மனதின் பொத்தானை அழுத்தியபடி எங்கள் தளம் முழுதும் பரவியது இளையநிலா.


குறைந்தபட்சம் இரண்டு தலைமுறைகளின் இளமைகளையேனும் ஊடுருவி நாளும் பொழுதும் எண்ணற்ற உதடுகள் முணுமுணுத்த பாடல் தான். ஆண்டுகள் கடந்தாலும் மீண்டும் மீண்டும் கேட்க வேண்டும் என்ற தூண்டுதல் சற்றும் குறைந்து விடாத வண்ணம் அழுந்தத் தடம் பதித்த பாடல் தான். இந்தப் பாடலின் கட்டமைப்பு பற்றியோ இசையும் வரிகளும் புரியும் அதிசயம் பற்றியோ நாம் பேசப்போவதில்லை. கரும்பு எப்படி இனிக்கும் என்பது பற்றி கட்டுரை தேவையா என்ன? இங்கு நாம் காணப்போவது ஒரு பாடல் பரப்பின் மீது படரும் காலம் நம் மீது ஏற்படுத்தும் தாக்கத்தை...அது நமக்குள் ஏற்படுத்தும் ஞாபகங்களின் தேக்கத்தை...


அந்த இரவின் பொழுதில் ஒரு முறை பொழிந்து முடித்த இளையநிலாவை "can you play that again " என்று தன் இருக்கையில் இருந்து அழைத்தார் ரஞ்சன். எங்கள் குழுவின் மேலாளர்களில் ஒருவர். மேலாளர்களுக்கான பாசாங்கற்றவர். பெங்காலிகள் கலை ஆர்வம் மிக்கவர்கள் என்ற கூற்றை நாம் நம்புவதற்கு மற்றுமொரு சாமானிய சான்று ரஞ்சன். கிடார் வாசிப்பார். மிக முக்கியமான நீண்ட மீட்டிங்குகளின் முடிவில் சோர்வேதுமின்றி ஏதோ ஒரு டுயூனை "லலலா" என்று முணுமுணுத்தபடி வெளியேறுவார்.

மீண்டும் ஒரு முறை இளைய நிலா பொழிந்த பின்பு என் தோளை பின்னிருந்து ஒரு கை தொட்டது. அவர்தான்...இது இளையராஜா தானே என்றார். நம்மவரை நாட்டின் மற்றொரு மூலையில் இருக்கும் ஒருவர், அவரின் படைப்பின் மூலமாகவே அடையாளம் காணும் பொழுது கணப்பொழுதில் ஒரு மகிழ்ச்சி ஏற்படத்தான் செய்கிறது. பாடலின் முடிவில் வரும் கிடாரை இளையராஜாவைத் தவிர வேறொருவர் கோர்த்திருக்கக் கூடிய சாத்தியம் மிகக் குறைவு என்றவர் "நநந..." என்று அதை வாசிப்பதைப் போன்ற அபிநயங்களை கை மடக்கிக் காட்டியபடி பாடிய காட்சி அப்படியே புகைப்படம் எடுத்தது போல் இன்றும் தெளிவாய் நினைவிருக்கிறது. நான் இதை காப்பி செய்து கொள்கிறேன் என்று தனது கணிணியில் ஏற்றம் செய்து கொண்டார். சில மாதங்கள் கடந்திருக்கும். ஒரு ஞாயிற்றுக் கிழமை வேலை முடிந்து கிளம்பும் தறுவாயில், "நிறைய வேலை பார்த்தாயிற்று. இங்கு வா" என்று தன் இருக்கைக்கு அழைத்தார். அவரின் கணிணியிலிருந்து ஒரு வீடியோ போட்டார். இளையநிலாவின் இறுதியில் வரும் கிடாரை அவர் தன் வீட்டில் வாசித்துப் பார்க்கும் வீடியோ... "தினமும் சற்று நேரமேனும் இதை பிராக்டிஸ் செய்து வருகிறேன். கேட்கும்படியாகவது இருக்கிறதா" என்றார். "பிரமாதமாய் இருக்கிறது " என்றேன் நான். "அப்படிச் சொல்லாதே. இந்தப் பாடலில் counterpoints எக்கச்சக்கமான  இருக்கின்றன. அவை நமக்குப் பிடிபடுவதற்கே புண்ணியம் செய்திருக்க வேண்டும். அதன் பக்கத்தில் கூட என் வாசிப்பு இல்லை என்றார். counterpoint என்றால் என்ன என்று ஆவலுடன் கேட்டேன். இளையராஜாவை ரசிப்பவர்கள் கவுண்ட்டர் பாயிண்ட்களை அனுபவத்திருப்பார்கள். அந்தப் பெயர் மட்டும்தான் அவர்களுக்கு தெரியாமல் இருக்கக் கூடும் என்று சிரித்தார். "இரண்டு வேறுபட்ட ஆனால் ஒன்றுக்கொன்று தேவைப்பட்ட‌ இசை கோர்வையோ, இசைக் கோர்வையும் வரியுமோ ஒரே தளத்தில் இணைந்து இசைக்கும் பொழுது வரும் இயைவுதான் counterpoint... ஈசியாக சொல்லிவிட்டேன். இவ்வாறு ஒன்றை உருவாக்குவது அத்தனை எளிதல்ல‌. கருவியும் கருவியும் கவுண்டர் பாயிண்ட் ஆகலாம். கருவியும் வார்த்தையும் counterpoint ஆகலாம். ஏன் ஒரே கருவியே கூட அவ்வாறு இயங்கலாம். இப்பாடலில் கிடாரும் கிடாருமே கவுண்டர் பாயிண்ட்களாக பல இடங்களில் வருகின்றன. நினைத்துப்பார்க்கவே கடினமான விஷயம் இது" என்றார்.

தான் கேட்ட வரையில் இந்தியாவில் இளையராஜா தவிர வேறு இசையமைப்பாளர்கள் எவருமே கவுண்ட்டர்பாயிண்ட் பக்கம் வருவதற்கே யோசிப்பார்கள் போல என்றவர், வடக்கே சலீல் சவுத்ரி சில அற்புதமான கம்போசிஷன்கள் செய்திருக்கிறார் என்றும் அவரும் இதை சில இடங்களில் கையாண்டிருக்கிறார் என்றும் சொன்னார். அவருக்கு ஒரு ஆனந்த அதிர்ச்சி கொடுக்க நினைத்த நான், என் இருக்கைக்கு வரும்படி வேண்டினேன். "பூ வண்ணம் போல நெஞ்சம்..." என்னும் "அழியாத கோலங்களை" ஓட விட்டேன். "இதுல salil சாயல் நிறைய இருக்கு" என்றவரிடம் "சாயல் இல்லை. இது அவரோடது தான்" என்றவுடன் அவர் முகத்தில் தெரிந்த உணர்வில், எனக்கும் அவருக்கும் ஒரு "counterpoint" ஏற்பட்டது போல இருந்தது.

தூய மழையை மலையின் மயிர்கால்களின் வழியே மண் முழுக்க தன் மூச்சாக உள்ளிழுத்து காடாக்கி ஆறாக்கி களத்து மேடுகளின் வழியே காய்கனியாய் உருமாறி கடைகளில் கண்டெடுத்து பசியாறும் சாமானிய மனிதர்களான நம் போன்றவர்களுக்கு, அத்தகைய மழை பயணிக்கும் பாதை எத்தகைய ரகசியமோ அதை ஒத்தது இசையின் ஆக்க ரகசியம். எனவே பசியாறுதலின் பொருட்டு இசை கேட்கும்நான் அதை என் மனக்கருவிக்கு ஏற்றவாறு அர்த்தம் செய்து கொண்டேன். ஒரு பாடலுக்குள் வரும் நொடிகளின் புள்ளிகளில் காலம் நம் நினைவின் சுள்ளிகளை பற்ற வைத்தால் அது நமக்கே நமக்கான பிரத்யேகமான கவுண்டர் பாயிண்ட் இல்லையா? அப்படி எத்தனை எத்தனை லட்சம் மனங்களில் எத்தனை எத்தனை கோடி கவுண்டர் பாயிண்ட்களை வைத்து வாழ்க்கை கோலம் போட்டிருக்கிறார் இளையராஜா?

அன்றிரவு அலுவலக வண்டியில் வீடு திரும்பும் பொழுது கவுண்ட்டர்பாயிண்ட் பற்றி யோசித்துக் கொண்டிருந்தேன். சட்டென்று சில ஆண்டுகள் முன்பு நடந்த சம்பவம் ஒன்று ஞாபகத்தில் வந்தது. ஞாபகங்கள் என்பதே சட்டென்று வரும் "கவுண்டர்பாயிண்ட்"களின் கோர்வைகள் தானே? அப்போது நாங்கள் ஒரு காரை வாடகைக்கு அமர்த்தி பல சுற்றுலா தலங்களுக்கு சென்று கொண்டிருந்தோம். நான் டிரைவரை அவ்வப்போது ஓய்வு எடுக்கும்படியும் தொடர்ந்து ஓட்டாதீர்கள் என்றும் சொல்லியபடி இருந்தேன். ஒரு முறை அவர், "இளையராஜா கேஸட் நிறைய இருக்கு சார். போயிட்டே இருக்கலாம்" என்றார். போயிட்டே இருக்கலாம்...ஆம். வாகனத்தில் மட்டுமல்ல. வாழ்க்கை வண்டி ஏறி இறங்கும் மேடு பள்ளங்களில் கவிழ்ந்து விடாமல் நம்மை உணர்வுகளின் கவுண்ட்டர்பாயிண்ட்களில் உட்காரவைத்து ஆசுவாசப்படுத்தி அழைத்துச் செல்லும் வாகனத்தின் இருக்கைகள் தானே இளையராஜாவின் counterpointக‌ள்?

என்பதுகளில் வளர்ந்தவர்களின் அனைவரின் நினைவுக் கோலங்களிலும் ஒரு counterpoint புள்ளியாக கட்டாயம் இடப்பட்டிருக்கும் இந்த இளையநிலா...அப்படியொரு புள்ளியை ஒரு பதிவில் அடக்க இயலுமா? தொடர்வோம்...

குறிப்பு: ஆங்கிலத்தில் நிகழ்ந்த ரஞ்சனுடனான உரையாடல்கள் இங்கு தமிழில் உருமாற்றப்பட்டிருக்கின்றன.